புகாரளிக்க வந்த பெண்ணை மயக்கி நெருக்கமாக இருந்த தலைமைக் காவலர்!

திருச்சி அருகே கணவரை காணவில்லை என புகாரளிக்க வந்த பெண்ணை மயக்கி, அவரோடு நெருக்கமாக இருந்த தலைமைக் காவலர் ஒருவர், கையும் களவுமாகப் பிடிபட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி அருகே புலிவலத்தைச் சேர்ந்த சிராஜுநிஷா என்பவரின் தம்பி முகம்மது ஜக்ரியா, ஒரு பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். சில தினங்களுக்கு முன் மனைவியை கைவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் அவர் தலைமறைவானதாக அக்கம்பக்கதினர் கூறுகின்றனர். காதல் திருமணம் என்பதால் அந்தப் பெண்ணுடன் சிராஜுநிஷாவுக்கு பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படும் நிலையில், தம்பியைக் காணவில்லை என்று அவரும், கணவரைக் காணவில்லை என அப்பெண்ணும் தனித்தனியே புலிவலம் காவல்நிலையத்தில் புகாரளித்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது குடும்பப் பஞ்சாயத்தை விசாரித்து வந்த புலிவலம் காவல்நிலைய தலைமைக் காவலர் ராமருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

தலைமைக் காவலருக்கும் கணவரை பிரிந்த அந்த பெண்ணுக்குமான நெருக்கத்தை அறிந்துகொண்ட சிராஜுநிஷா, அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க காத்திருந்தார். சனிக்கிழமை நள்ளிரவு பெண்ணின் வீட்டு வாசலில் ராமரின் இருசக்கர வாகனம் நிற்பதைப் பார்த்த சிராஜுநிஷா, உடனடியாகச் சென்று அந்த வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். உறவினர்கள் முன்னிலையில் கதவைத் திறந்து கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.

இந்தத் தகவலையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக், ராமரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். கணவரைக் காணவில்லை என்று வந்த பெண்ணின் நிலையை சாதகமாக்கி, அவருக்கு கணவன் போலவே மாற எண்ணிய காவலர், காவல்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்திவிட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!