பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சட்ட மூலத்தில் மிகப்பெரிய குறைபாடுகள் காணப்படுவதாகக் கூறப்படு கின்றது. இதனை இறுதிப்போர் மற்றும் கடந்த கால விடயங்களுக் குப் பயன்படுத்த முடியாது என்பதால் தமிழர்கள் இந்தச் சட்ட மூலம் தமக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக அமையாது என்றே நினைக்கின்றனர்.
இதேவேளை காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கென அமைக்கப்பட்ட அலுவலகத்துக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. ஐ. நா.மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் மிக அண்மையில் இடம்பெற்ற வேளையில் இந்த நியமனங்கள் இடம் பெற்றமை பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஜெனிவாவைச் சமாளிப்பதற்கான அரசின் ஏமாற்று வேலையே இதுவென காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். எங்கு தேடியும் காணாமல் போனவர்களைக் கண்டறிய முடியவில்லை யென அரச தலைவர் கைவிரித்துவிட்ட நிலையில், இந்த நியமனங்கள் தேவையற்றவை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றையெல்லாம் பார்க்கும் போது அரசின் கபடத்தனம் தௌிவாகப் புரிகின்றது.
காணாமல் போனவர்களைக் கண்டறியும் விடயத்தில்
ஒப்புக்காகச் செயற்படும் அரசு
காணாமல் போனவர்களைக் கண்டறிய நடவடிக்கை எடுப்பதாக அரச தலைவர் உறுதிமொழி வழங்கி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், வெறும் கண் துடைப்புக் காகவும், உலக நாடுகளை ஏமாற்றுவதற்காகவும் அரசு செயற்படுகின்றதோ என்ற ஐயமும் கூடவே எழுகின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்துக்கு தலைவரையும், ஏனைய உறுப்பினர்களையும் நியமித்ததை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் வரவேற்றிருந்தமை இதைத் தௌிவாக எடுத்துக்காட்டி விட்டது.
ஜெனிவா சென்ற இலங்கைத் தூதுக்குழுவும் இதையொரு பெரிய விடயமாகக் காட்டி அரசின் மீதான அழுத்தங்களைச் சமாளிக்க முயன்றது. காணாமல் போனவர்களின் உறவுகள் எதிர்கொள்கின்ற துயரங்களுக்கு ஈடு இணையாக எதையும் கூறிவிட முடியாது.
தமது கண்முன்னால் தமது உறவுகளைத் தொலைத்துவிட்டு நிற்கின்ற இவர்களின் மனம் அரச தலைவர் கூறியதைக் கேட்டபோது என்னபாடுபட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகின்றது. இந்த நிலையில் வெறும் கண் துடைப்புக்காக அலுவலகம் அமைத்து, அதற்கு அலுவலர்களையும் நியமிக்கும் சமாளிப்பு நாடகத்தை அவர்களால் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?
காணாமல் போனவர்களில் பலர் தத்தம் வீடுகளில் வைத்துப் படையினரால் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். இதைவிட இறுதிப் போரின்போதும் அதற்குப் பின்னரும் பலர் காணாமல் போயிருக்கின்றனர். போர் உச்சக்கட்டத்தை எட்டிய போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற பலரது நிலை தொடர்பாகவும் இதுவரை எதுவித தகவலும் தெரியவில்லை.
இதைவிடப் படையினரிடம் சரணடையச் சென்ற போராளிகளில் பலரைப் படையினர் தமது வாகனங்களிள் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள். இவர்கள் தொடர்பாகவும் எதுவுமே தெரியவரவில்லை. இவ்வாறு பல்வேறு நிலைகளில் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் அனைவரையும் தேடி அவர்களது உறவுகள் அலைந்து கொண்டிருக்கின்றனர். தமது உறவுகள் எங்கோ ஓரிடத்தில் உயிருடன் இருப்பதாகவே அவர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையே அவர்களை உயிருடன் வாழவைத்துக் கொண்டிருக்கின்றது.
போரின் வடுக்களால் பாதிக்கப்படாத தமிழர்கள் இங்கு இல்லையென்றுதான் கூற வேண்டும். ஒவ்வொரு தமிழனும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் எந்தவொரு தமிழ்க் குடிமக னுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தாம் போரை நடத்தி வெற்றி கொண்டதாக மகிந்த ராஜபக்ச கூறிக் கொண்டிருக்கிறார்.
அவர் சொல்வது உண்மையாக இருந்தால், முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் மீள்குடியமர்ந்த குடும்பங்களில் 6 ஆயிரத்து 246 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், 2 ஆயிரத்து 291 மாற்றுத் திறனாளிகளும் எவ்வாறு காணப்படுகின்றனர் என்பதற்கு விடை தெரியவில்லை. இதைப்போன்று ஏனைய தமிழர் பிரதேசங்களினதும் நிலைமை காணப்படுகின்றது.
ஏற்கனவே காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் புதிய விசாரணைகளை மேற்கொள்வது காலத்தைக் கடத்துகின்றதொரு உத்தியாகவே கருதமுடிகின்றது.
காணாமல் போனவர்களின் விடயத்தில் அரசு இனியும் மெத்தனப் போக்குடன் செயற்படுவது நல்லதல்ல. அமெரிக்கா உள்ளிட்ட பிரதான நாடுகள் இந்த விடயத்தில் அதிக அக்கறை கொள்ள ஆரம்பித்துவிட்டன. ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கைக்கு எதிரான கடுமையான அறிக்கையை எவருமே எளிதில் புறமொதுக்கிவிட முடியாது.
கடினமானதொரு காலகட்டத்தை இலங்கை எதிர்கொள்ளப்போவதை இப்போதே அனுமானிக்க முடிகின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பான விடயமும், படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயமும் இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வல்லவை.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!