அவசர சட்ட விவகாரத்தில் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. ஏற்ற இறக்கங்கள் பலவற்றை நான் சந்தித்துள்ளேன். நெருக்கடிகளால் நான் விரக்தி அடைந்துவிடுவதில்லை.
காங்கிரஸ் உயர்நிலைக் குழுவின் ஒப்புதல் பெற்றே அவசரக் சட்டம் கொண்டுவரப்பட்டது. அமைச்சரவையிலும் அவசரச் சட்டம் பற்றி இருமுறை விவாதிக்கப்பட்டது என்று தண்டிக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களின் பதவி பறிப்பை தடுக்கும் அவசர சட்டம் விவகாரம் பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இப்பாறு பதில் அளித்தார்.
மேலும் அவர் பேசும்போது,
ராகுல் காந்தி பேசியது பற்றி நான் அறிவேன். ராகுல் காந்தி எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அவசர சட்டம் குறித்து அமைச்சரவை சகாக்களையும் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். ஒருவர் தனது கருத்துக்களை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
அரசின் முடிவு குறித்து காங்கிரஸ்காரர்களும், அமைச்சரவை சகாவும் கேட்க உரிமை உண்டு. ராகுலின் கருத்தால் நான் மட்டம் தட்டுப்பட்டுவிட்டதாக கருதவில்லை.
அவசரச் சட்டம் பற்றி அவ்வாறு பேசியது ஏன் என்பது ஆராயப்பட வேண்டும். பிரச்சனை என்ன என்பது பற்றி ராகுல்காந்திக்கு விளக்கம் அளிப்பேன். தம்மை சந்திக்க ராகுல் காந்தி நேரம் கேட்டுள்ளார். அவசர சட்டம் பற்றி ராகுல் காந்தியுடன் விவாதிக்க உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
தண்டனை பெற்ற எம்.பி., மற்றும் எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் அவசர சட்டத்தை திரும்பப் பெறுவது பற்றி மத்திய அமைச்சரவை புதன்கிழமை முடிவெடுக்கிறது.
இந்த அவசர சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவசர சட்டம் முட்டாள் தனமானது. அதனை கிழித்து எறிய வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கருத்தால் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
















