உலகின் மிக முக்கியமான சமூக வலைத் தளங்களில் ஒன்றான பேஸ் புக்கை தடை செய்ய முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பேஸ் புக் இணையம் ஓர் தொற்று நோயைப் போன்று பரவி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பல்வேறு சமூக சீரழிவுகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் இணையத்தை சட்ட ரீதியாக தடை செய்ய முடியாவிட்டாலும் வேறும் வழிகளில் அதன் பயன்பாட்டை தடை செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேஸ்புக் பல்வேறு கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். பேஸ்புக்கை நம்ப வேண்டாம் என அவர் மாணவ மாணவியரிடம் கோரியுள்ளார்.
இதேவேளை, டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணைய தளங்களை அனைத்து அரசாங்க அதிகாரிகளும் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
















