அமெரிக்காவில் அரசாங்க அதிகாரிகளால் இதுவரை அங்கீகரிக்கப்படாத மருந்தொன்றைப் பயன்படுத்தி இருவருக்கு புதன்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தக் கைதிகளின் இறுதி மேன்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்ததையடுத்தே மேற்படி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மைக்கேல் யொவெல் மற்றும் அரிஸோனா மாநிலத்தைச் சேர்ந்த எட்வர்ட் ஷட் (71 வயது) ஆகியோரே மேற்படி மரணதண்டனை நிறைவேற்றத்துக்குள்ளான கைதிகளாவர்.
போதைவஸ்தை வாங்குவதற்காக தனது பெற்றோரிடமிருந்து பணத்தைத் திருடிய பின்னர் அவர்களைக் கொன்றதாக மைக்கேல் யொவெல் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அத்துடன் அவர் இதன்போது எரிவாயு கொள்கலனை திறந்துவிட்டு தனது வீட்டை வெடிக்க வைத்து கொலை ஆதாரங்களை அழிக்கவும் முயற்சித்துள்ளார். மேற்படி குற்றச் செயல்களை மேற்கொள்ளும்போது மைக்கேல் யொவெலின் வயது 28 ஆகும்.
மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு சில நிமிடங்களேயிருந்த நிலையில் எட்வர்ட் ஷட், ”34 வருடங்களின் பின் நான் விடுதலையாகி வீட்டிற்கு (விண்ணுக்கு) செல்லப்போகிறேன். சிறை அதிகாரியே உங்களுக்கு நன்றி. இவைதான் எனது இறுதி வார்த்தைகளாகும்” என்று கூறினார்.
1978 ஆம் ஆண்டில் 74 வயது நபரொருவரைப் படுகொலை செய்ததாக எட்வர்ட் ஷட் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், யொவெலுக்கும் ஷட்டிற்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பால் இதுவரை அங்கீகாரம் வழங்கப்பட்டிராத நச்சு மருந்தொன்றை ஊசி மூலம் ஏற்றி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
















