குருந்தூர்மலைக்கு இன்று கொழும்பிலிருந்து சென்றுள்ள அதிகாரிகள்! நாடாளுமன்றில் அம்பலம்

குருந்தூர்மலைக்கு கொழும்பில் இருந்து நில அளவை திணைக்கள அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு குருந்தூர்மலை விடயத்தில் தொடர்ந்தும் அத்துமீறல்கள் இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே அங்கு நிர்மாணிப்புக்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

உறுதிமொழியை மீறி அனுப்பப்பட்டுள்ள அதிகாரிகள்

எனினும், அங்கு நீதிமன்றத்தை மீறி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதியளித்திருந்தார்.

அதுவரையில் குருந்தூர்மலையில் எவ்வித செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் நாடாளுமன்ற சபையில் மேற்கொள்ளப்பட்ட இந்த உறுதிமொழியை மீறி இன்று கொழும்பில் இருந்து நில அளவை திணைக்கள அதிகாரிகள், குருந்தூர்மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது நீதிமன்ற உத்தரவை மாத்திரம் அல்ல. நாடாளுமன்ற சபையின் உறுதிமொழியையும் மீறும் செயல். எனவே இந்த விடயத்தில் பிரதமர் கவனம் செலுத்தி உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறுக்கிட்டு, நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள இந்துக்கோயில்கள் தொடர்பில் எவரும் பிரச்சினைகளை எழுப்புவதில்லை.எனினும் வடக்கு கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகள் பற்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சினைகளை எழுப்பி வருவதுடன் குறிப்பாக, ஜெனீவா அமர்வு வரும்போதே இவ்வாறான பிரச்சினைகள் முன்வைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதிலளிக்கையில், இது நீதிமன்ற உத்தரவுடன் தொடர்புடையது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், இந்த சபையில் அளிக்கப்பட்ட உறுதிமொழியும் இன்று மீறப்பட்டுள்ளமையை தாம் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!