தெ.ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா காலமானார்

nelsonதென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, தென் ஆப்ரிக்கா தலைநகர் ஜோகன்னெஸ்பர்க்கில் அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது (95). அவர் மறைவுச் செய்தியை அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அறிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் பேசிய ஜூமா: “தென் ஆப்ரிக்க மக்களே, நமது அன்பிற்குரிய…ஜனநாயக தென் ஆப்ரிக்காவிற்கு வித்திட்ட அதிபர், நம்மை விட்டு பிரிந்தார். நமது தேசம் தனது மிகப் பெரிய பிள்ளையை இழந்து விட்டது. மக்கள் தங்கள் தந்தையை இழந்துவிட்டனர்”. என்றார்.

மண்டேலாவின் இறுதிச் சடங்கு முடியும் வரை நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் படும் என அவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாகவே நெல்சன் மண்டேலா உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.

மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா. பொது செயலாளர் பான்-கி-மூன் ,அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

‘மனித நேயத்தின் அடையாளம் மண்டேலா’

மண்டேலா மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், மண்டேலா மனித நேயத்தின் அடையாளமாக திகழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் தம் ஆழ்ந்த இரங்கலையு, வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

‘மண்டேலா உண்மையான காந்தியவாதி’

நெல்சன் மண்டேலா மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மண்டேலா உண்மையான காந்தியவாதி என தெரிவித்துள்ளார். மேலும் அவரது இழப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு குமட்டும் அல்ல இந்தியாவுக்கும் பெரும் இழப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் வாழ்வும், அவர் மேற்கொண்ட பணிகளும் இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் தருவதாக இருக்கும் என்றார்.

‘சீன மக்களின் தோழர் மண்டேலா’

மண்டேலா மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ள சீனா, மண்டேலா சீன மக்களின் பழம்பெரும் தோழராக விளங்கியதாக தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், சீனா-தென் ஆப்ரிக்கார் இடையேயான நட்பு வலுப்பெற மண்டேலா வரலாற்றுச் சிறப்பு மிக்க பணிகளை ஆற்றியுள்ளார் என்றார்.

‘மண்டேலா ஈடு இணையற்றத் தலைவர்’

இந்த உலகம் இனி நெல்சன் மண்டேலா போன்ற ஒரு தலைவரைக் காணாது என, மண்டேலா மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். மேலும், லட்சோப லட்ச மக்களை ஊக்குவித்த ஒப்பற்றத் தலைவர் மண்டேலா, அவரால் ஈர்க்கப்பட்டவர்களில் நானுன் ஒருவன். அதனால், எனது முதல் அரசியல் நடவடிக்கை நிறவெறிக்கு எதிராக குரல் கொடுப்பதாகவே இருந்தது, என தெரிவித்துள்ளார்.

‘உலகின் ஒளி மறைந்தது’

மண்டேலா மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இந்த உலகின் சுடர் ஒளி மறைந்து விட்டாதாகக் கூறியுள்ளார். மேலும், மண்டேலா சம கால மக்களுக்கு மட்டும் கொண்டாடும் தலைவன் அல்ல, காலத்தால் வெல்ல முடியாத தலைவன், என தெரிவித்துள்ளார்.

‘நீதியின் காவலர் மண்டேலா’

மறைந்த தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, நீதியின் காவலர் என புகழாரம் சூட்டியுள்ளது ஐ.நா அமைப்பு. நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு தியாகங்களை செய்தவர் மண்டேலா எனவும் தெரிவித்துள்ளது.

Tags: ,

Leave a Reply