இன அழிப்பை மறைக்க அரசு நன்கு திட்டமிட்டு சதி; அதற்காகவே இந்தப் போரழிவுக் கணக்கெடுப்பு அமெ.குழுவுக்கு யாழ்ப்பாணத்தில் எடுத்துரைப்பு

srilanka-war2இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, இங்கு இன அழிப்பே நடைபெறவில்லை என்பதைக் காண்பிப்பதற்கே தற்போது அரசு கணக்கெடுப்பை மேற்கொள்கிறது.

இந்தக் கணக்கெடுப்புக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் சபைக்குக் கணக்குக் காட்டுவதற்கே தவிர இதனால் பயனேதும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட சதி.

இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் பல்வேறு தரப்பினரும் எடுத்துரைத்தனர்.

யாழ்.மாவட்டத்துக்கு நேற்று மதியம் வருகை தந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்க ளத்தின் வெளிவிவகார குழுவின் செனட்டர் டேமியன் முர்பே, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வொஷிங்ரன் பிரதிநிதி மரியா ரெரியோ மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் தலைமை அரசியல் அதிகாரி மைக்கல் யஹாங்ஸ்ரன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் இங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

சுன்னாகத்தில் உள்ள விடுதயொன்றில் வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா,சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரை இந்தக் குழுவினர் மதிய உணவுடன் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் மேற்படி குழுவினர் பலாலி வீதியூடாக வசாவிளான் சந்திவரை சென்றனர். உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும்
வேலியூடாக அப்பகுதிகளைப் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து யாழ். நகரில் மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் கலந்துரையாடல் நடத்தினர். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடனும் சந்திப்பு நடத்தினர்.

இந்தச் சந்திப்புக்களின் போதே மேற்படி விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக இரண்டு பிரேரணைகள் சமர்பிக்கப்பட்டன. இந்தப் பிரேரணைகள் சமர்பிக்கப்பட்டு அதில் சில விடயங்களில் இலங்கை அரசு மீது
கேள்வியெழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு இலங்கை அரசு தன்னைத் தயார்படுத்தி வருகின்றது. இதற்காகவே இங்கு கணக்கெடுப்புக்கள், விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இதன் உண்மைத் தன்மை பற்றிச் சொல்வதற்கு பாதிக்கப்பட்ட தரப்பாகிய எங்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை என்று இதன்போது அவர்களுக்கு எடுத்து விளக்கப்பட்டது.

ஐ.நா கூட்டத் தொடரில் நாங்கள் கலந்து கொண்டு உண்மை நிலைமை தெரிவிக்க முடியாது. உங்களால் சமர்பிக்கப்படும் பிரேரணையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு இலங்கை அரசே பதில் வழங்குகின்றது. அதற்குப் பொய்யான தயார்ப்படுத்தல்களையும் அரசு செய்கின்றது.

தற்போது நாடளாவியரீதியில் போர்க்கால இழப்புத் தொடர்பில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தக் கணக்கெடுப்புக்கள் எந்த வகையிலும் உதவப் போவதில்லை. தமிழ் மக்கள் போரில் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டனர்.அவர்கள் இந்தக் கணக்கெடுப்புக்குள் உள்ளடக்கப்படவில்லை.

அவர்களின் உறவினர்கள் கூடத் தகவலை வழங்க முடியாத நிலை இருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் உயிரிழப்புக்கள் தொடர்பில் எவ்வாறு உண்மையான தகவல் பெறப்படும். மாறாகப் பொய்யான குறைந்தளவான உயிரிழப்புக்கள் தொடர்பான தகவல்கள் மட்டுமே கிடைக்கப்பெறும்.

இதனூடாக இனவழிப்பு இடம்பெறவேயில்லை என்பதை காண்பிப்பதற்கு அரசு முயல்கின்றது. அத்துடன் நீங்கள் (அமெரிக்கா) தனித்து 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மட்டும் இடம்பெற்றதைப் பார்க்கக் கூடாது.

தமிழர் தாயகப் பகுதியில் 1983 ஆம் ஆண்டிலிருந்தே போர் இடம்பெற்று வருவதை நினைவில் கொள்ள வேண்டும் என்று ஒரே குரலில் அமெரிக்கக் குழுவிடம் அனைவரும் எடுத்துரைத்தனர்.

இந்தக் கணக்கெடுப்புக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் சபைக்குக் கணக்குக் காட்டுவதற்கே தவிர இதனால் பயனேதும் இல்லை.

Tags: ,

Leave a Reply