60 வயது சீன பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிரசவம்

தனது 29 வயது மகள் உயிரிழந்ததையடுத்து இனவிருத்தி செய்து கொண்ட சீனப்பெண்ணொருவர் ஆரோக்கி­ய­மான இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிருந்தன.
இதன் மூலம் அந்நாட்டின் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த மிகவும் வயதான பெண் என்ற பெருமையை ஷெங் ஹெயிலின் என்ற மேற்படி பெண் பெறுகிறார்.

2009ஆம் ஆண்டு காபனோரொட்சைட்டால் நச்சேற்ற­ம­டைந்து அவரது மகள் உயிரிழந்தார். இந்நிலையில் ஹெயிலினும் அவரது கணவர் வுஜியங்ஸொயுவும் இனவிருத்தி சிகிச்சைக்குட்படுத்த­ப்பட்ட­தையடுத்து ஹெயிலின் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

பிறந்த குழந்தைகளுக்கு ஸிஸி, ஹூயஹூயி என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தமது வாழ்வின் தனிமையை போக்கும் முகமாக வயோதிப காலத்தில் குழந்தைகளை பிரசவித்துள்ள ஹெயிலின் தற்போது தனது குழந்தைகளை பராமரிக்க கடுமையாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

குடும்பத்திற்கு ஒரு குழந்தை கொள்கையை 1970ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடித்து வந்த சீன அரசாங்கம், பெற்றோரில் ஒருவர் குடும்பத்தில் ஒரே பிள்ளையாக இருக்கும் பட்சத்தில் இரு பிள்ளைகளை பெற்றுக்கொள்ள முடியும் என கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தது.

சீனாவில் குடும்பத்திற்கு ஒரு பிள்ளை கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின்னர் அந்நாட்டிலுள்ள சுமார் ஒரு மில்லியன் குடும்பங்கள் தமது ஒரேயொரு பிள்ளையையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply