கிளிநொச்சி திருநகர் தெற்கில் திடீரெனச் சாவடைந்த சிறுவனின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காக அவனது தந்தை ரி.ஐ.டி.யினரால் அழைத்துவரப்பட்டபோதும் 18 நிமிடங்கள் மாத்திரமே மகனின் உடலைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.
மகனின் இறுதிக் கடமைகளை செய்வதற்கு தந்தையை அனுமதிக்குமாறு உறவுகள் கதறியழுத போதும் ரி.ஐ.டியினர் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி அவரை இழுத்துச் சென்றனர்.
இந்த அவலச் சம்பவத்தால் நேற்று மரணவீடு அதிர்ந்து போனது. கடந்த 4 ஆம் திகதி திடீரென உயிரிழந்த வீ.நிதர்சனின் (வயது 15) உடல் தந்தையின் வரவுக்காக நான்கு நாள்கள் காத்திருந்தது.
தந்தையை இறுதிக் கிரியைக்கு அனுமதிக்குமாறு கோரி உறவினர்கள் இரண்டு நாள்களாக அலைந்த நிலையில் நேற்று ரி.ஐ.டி.யினர் சிறுவனின் தந்தையாரான சிவசுப்பிரமணியம் வீரலிங்கத்தை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
இதன்போது 6 இற்கும் மேற்பட்ட சிறைக்காவலர்கள், 11 இற்கும் மேற்பட்ட பொலிஸார் அவருக்கு காவலாக வந்திருந்தனர்.
தந்தையை அழைத்துவந்து 18 ஆவது நிமிடத்தில் மீளவும் ஏற்றிச் செல்லமுற்பட்டனர். இதன்போது உறவினர்கள் கூடி மகனின் இறுதி நிகழ்வு நடைபெறும் சுடலை வரை தந்தையை அனுமதியுங்கள் என்று கோரி கதறியழுதுள்ளனர்.
அவர்களது புலம்பலையும் பொருட்படுத்தாத பொலிஸாரும் சிறைக்காவலர்களும் துப்பாக்கிகளை எடுத்து உறவினர்கள் மீது நீட்டி அச்சுறுத்திவிட்டு அவரை அங்கிருந்து கொண்டு சென்றுவிட்டனர்.
இந்தச் சம்பவத்தால் சிறுவனின் இறுதிக் சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்கள் அதிர்ந்து போயினர். ஈவிரக்கமின்றி அதிகாரிகள் நடந்து கொண்டமை, துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியமை போன்ற மனிதப் பண்பில்லதாக செயலால் சாவு வீடே பெரும் சோகத்தில் ஆழ்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
















