இலங்கையை பிறப்படமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்:-
ஏழு மாத ஆண் குழந்தை, மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு இளம் குழந்தைகளின் சடலங்களையும் அவர்களின் தாயாரது சடலத்தையும் பிரித்தானிய பொலிசார் மீட்டுள்ளனர்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை (09.01.14) பிற்பகல் லண்டன் நேரம் 5.20ற்கு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து வடமேற்கு லண்டன் Woodgrange Close பகுதிக்கு சென்ற பொலிசாரே இந்த சடலங்களை மீட்டுள்ளனர்.
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஜெயவாணி வாகேஸ்வரன் என்ற இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், தாயினுடைய மரணம் தற்கொலையினால் சம்பவித்ததா? என்ற சந்தேகம் தொடர்வதாகவும் தெரிவித்த பொலிசார், இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அயலவர்களில் 34 வயதுடைய தஸ்மா என்பவர் கூறுகையில் சக்த்திவேல் வாகீஸ்வரன் மற்றும் ஜெயவானி வாகிஸ்வரன் ஆகிய இளம் தம்பதியினர் தனது அயல்வீட்டில் வசித்து வந்ததாக தெரிவித்தார். அடிக்கடி அவர்களை பார்க்க முடிவதில்லை. ஆனால் ஒருவர் மாதத்தில் இரண்டு மூன்று தடவைகள் சத்தம் போட்டு வாதிட்டு சண்டை பிடிப்பது கேட்பதாகவும் பின்னர் அமைதியாகி விடுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
18 வருடங்களாக அந்தப் பகுதியில் வசிக்கும் லெஸ்லி கொற் கூறுகையில் கடந்த 1 வருடமாக இந்த மாடிவீட்டு தொடரில் இலங்கை வம்சாவழி என நம்பப்படும் இந்தக் குடும்பம் வசித்து வந்ததாக தெரிவித்தார்.
இந்த மரணங்கள் குறித்த விசாரணையை ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசார் மேற்கொள்கின்றனர்.
-GTN
















