இலங்கை ஒரு சிறிய நாடு. இந்த நாட்டில் 5 இனங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்தியாவில் பல கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனினும் அவர்கள் பிரிவினை வாதத்தையோ தனிநாட்டையோ கோரவில்லை. ஆனால் இலங்கையில் 03 மில்லியன் மக்கள் வாழும் இந்த சிறிய நாட்டில் தனிநாட்டைக் கோருவது பிரிவினையையே ஏற்படுத்தும் என பிரதமர் டீ.எம்.ஜயரட்ன யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ். துர்க்கா மணிமண்டபத்தில் முத்திரை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்து மதத்தினரும் பௌத்த மதத்தினரும் ஒரே சமய பழக்கவழக்கங்களை உடையவர்கள். இந்து மதத்தில் இருந்து பழக்கவழக்கங்களை பௌத்த மதத்தினரும் பின்பற்றி செயற்படுத்தி வருகின்றனர்.
எனவே இந்த நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக சிந்தித்து ஒரே கலாச்சாரத்தை கொண்டவர்களாக ஒற்றுமையாக சமத்துவம் சகோதரத்துவத்துடன் இலங்கையர் என்ற ரீதியில் வாழ வேண்டும்.
அத்துடன் இங்குள்ளவர்களை பிளவுபடுத்தி சமாதானத்தை குழப்பி தங்களது சுயலாபத்திற்கான வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டு வருகின்றனர். எனினும் இங்கு 5இனங்கள் வாழும் நிலை காணப்படுகின்றது.
எனினும் 3மில்லியன் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்ற நிலையில் இந்தியாவில் 35 கோடியே 80 இலட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனினும் அவர்கள் தனிநாடு கோரவில்லை.
இருப்பினும் இங்கு பிரிவாதம் ஏற்பட்டு இவ்வாறான நிலை தோன்றினால் இங்குள்ளவர்வர்கள் பாதிக்கப்படுவார்கள் .
இதுபோல எகிப்து ஈரான் போன்றநாடுகள் என்ன நிலை உருவாகியுள்ளது என நாம் பார்க்கவேண்டும். இந்த சிறிய நாட்டில் இவ்வாறு அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு இருக்கும் என புத்தியுள்ள நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
30 வருட காலயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வடக்கு கிழக்கு ஆகிய மாகாணங்களில் அரசினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்.
இதன்போது பாடசாலைகள் , வைத்தியசாலைகள், வீதிகள் மற்றும் கோயில்கள் என்பன அமைக்கப்பட்டுள்ளதுடன் புனரமைப்பும் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் புகையிரதம் யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் வரும் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி அவர்களையும் நாம் சமூகத்துடன் ஒன்றினைத்துள்ளோம். அத்துடன் தமிழ் மாணவர்களும் உத்தியோகத்தர்களும் சிங்கள மொழியை கற்கவேண்டும் அதேபோல் சிங்கள மாணவர்களும் உத்தியோகத்தர்களும் தமிழ் மொழியை கற்க வேண்டும் என்ற நடைமுறையும் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அனைத்து கட்சிகளும் அங்கம் வகித்தால் அதனூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காகஅனைவரும் கருத்துக்களை முன்வைக்க முடியும்.
அவை அனைத்தும் கலந்துரையாடப்பட்டு இனப்பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வு கிடைத்த பின்னரே ஜனாதிபதி தீர்வினை முன்வைப்பார்.
படித்த மக்கள் எப்போதும் பிரிந்து செல்வதற்காக சண்டையிட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள். பிரச்சினைகளை கலந்துரையாடல்கள் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
உலகிலேயே பழமை வாய்ந்த மதமாகவே இந்துமதம் உள்ளது. பழமை வாய்ந்தவர்களாகவே இந்து மக்கள் உள்ளனர். இந்துமதத்தை விட பழமையான மதம் வேறு ஒரு மதமும் இல்லை.
இதேவேளை, அனைவரும் முன்வந்து எதிர்கால சந்ததியினரின் வாழ்விற்காகவும் நாட்டிற்காகவும் செயற்பட வேண்டும் என வேண்டுகோளை விடுக்கின்றேன்.
அதுபோல இன்று உள்ள சந்தோசமான சூழல் எதிர்வரும் காலங்களில் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















