17 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். ஐக்கிய பிக்குகள் முன்னணியினால் கட்சித் தலைமையகத்தில் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
17 ஆம் திருத்தத்தை அரசு நடை முறைப்படுத்த வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்குள் போதைப் பொருள் மற்றும் எதனோல் கொண்டு வருவோர் பற்றிய தகவல்களை வெளிப்படுத்த மக்கள் முன்வருவார்கள்.
அரசு போதைப் பொருள், கசினோ, மதுபானம் போன்றவற்றை முதன்மைப்படுத்த முயற்சிக்கின்றது. அதற்கு எதிராக பெளத்த பிக்குகளே முதலில் குரல் கொடுத்துள்ளனர். போதைப் பொருள் கொள்கலனை விடுவிக்க பிரதமர் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசின் தெளிவான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டும். போதைப்பொருள் வர்த்தகர்களை அரச சாட்சியாளர்களாக மாற்றி விடுதலை செய்கின்றனர்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பணி நீக்கப்பட்டதன் ஊடாக நீதிமன்றின் சுயாதீனத் தன்மை சீர்குலைந்துள்ளது. 17ஆம் திருத்தத்தை நடை முறைப்படுத்துவதன் மூலம் நீதிமன்றம், பொலிஸ், தேர்தல் போன்றவற்றின் சுயாதீனத் தன்மையை உறுதி செய்ய முடியும் – என்றார்.
















