‘புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும், நல்ல கதைகளை படமாக்கவும்தான் தயாரிப்பாளராக மாறினேன்..!’
– தயாரிப்பாளர்களாக அவதாரம் எடுக்கும்போதெல்லாம் நம் இயக்குநர்கள் தவறாமல் சொல்லும் டயலாக் இது…
இயக்குநர்கள் தயாரிப்பாளர்களாக மாற உண்மையில் இதுதான் காரணமா?
இல்லை..! இன்னொரு பகீர் காரணமும் இருக்கிறது.
குறிப்பாக, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்ததன் பின்னணியில் பணம் சம்பாதிப்பது என்பதைத் தாண்டி வேறு ஒரு உள்நோக்கம் இருக்கிறது.
அதை அம்பலப்படுத்துவது திரைத்துறைக்கும், உதவி இயக்குநர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை!
வேறு இயக்குநர்களை வைத்து எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜாராணி ஆகிய படங்களைத் தயாரித்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மான் கராத்தே என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இந்தப் படங்களை அவர் தயாரித்தபோதெல்லாம், இதுதான் கதை, இவர்தான் இயக்குநர் என்பதை முடிவு செய்துவிட்ட பிறகும் கூட, ஐம்பதுக்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்களிடம் கதை கேட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் உதவி இயக்குநர்களிடம் கதையைக் கேட்பார். ஏற்கனவே கதையை முடிவு செய்துவிட்டதால், புதிதாக கதை சொல்ல வந்தவர்களின் கதையை சரி இல்லை என்று நிராகரிப்பார். நிராகரித்துக் கொண்டே இருப்பார்.
கதையையும் தேர்வு செய்துவிட்டு, இயக்குநரையும் முடிவு செய்த பிறகு ஏன் மற்றவர்களிடம் கதை கேட்க வேண்டும்?
அதுதான் ஏ.ஆர்.முருகதாஸின் தந்திரம்..!
ஐம்பது பேரிடம் கதை கேட்டதன் மூலம், தற்போதைய டிரெண்ட் என்ன என்பதையும், உதவி இயக்குநர்கள் எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதையும், எப்படிப்பட்ட கதைகளை எல்லாம் திரைப்படமாக எடுக்க தயாராக வைத்திருக்கிறார்கள் என்பதையும் மோப்பம் பிடிக்கிறார்.
அந்த டிரெண்டை தான் படம் இயக்கும்போது தன் கதையில் பயன்படுத்திக் கொள்கிறார்.
ஒருவருடைய கதையை, சிந்தனையை திருடுவதற்கு நிகரானதுதான் ஏ.ஆர்.முருகதாஸ் செய்யும் ‘இந்த வேலையும்’..!
உஷாரா இருங்க உதவி இயக்குநர்களே…!
















