நாட்டின் சிறுபான்மையினத்தவரை அடக்கி ஆள்வதானது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்று பலரை புதிதாக உருவாக்குவதற்கு சமமானது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 30 வருட காலமாக யுத்தம் நடைபெற்று வந்தது. இதனால் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது.
வடகிழக்கு பகுதிகளில் மாணவர்களின் கல்வி நிலை பெருமளவில் பாதிக்கப்பட்டது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வட கிழக்கில் வாழும் சிறுவர்களுக்கு பாடசாலை புத்தகப் பைகளை வழங்குவதற்கு பதிலாக துப்பாக்கிகளை வழங்கியது.
இதனால் தனது சிறுவயதில் புத்தகம் ஏந்த வேண்டிய கைகளில் துப்பாக்கியையே கையிலே ஏந்தினர் வடகிழக்கு அப்பாவி சிறுவர்கள்.
இந்நிலையில் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டி தற்போது சமாதான சூழலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நமக்கு பெற்றுத் தந்துள்ளார்.
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாழ்க்கை மேம்படுத்தப்பட்டு தற்சமயம் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை புதிதாக மீளவும் வட மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு சீரான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே மூல காரணமாகும்.
எனவே, யுத்தம் நிறைவடைந்தமையினால் முதலில் மகிழ்ச்சியடைவது தமிழ் மக்களாகும்.இருப்பினும் தற்போது சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக பல்வேறு அசம்பாவிதங்கள் இடம் பெற்று வருகிறது.
இதனால் நாட்டின் எதிர்காலத்திற்கே பாதிப்பு ஏற்படும்.இந்நிலையில் நாட்டின் சிறுபான்மை யினத்தவரை அடக்கி ஆள்வதானது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனைப் போன்று பலரை உருவாக்குவதற்கு சமமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















