வடக்கு மாகாண சபையை அமைத்து, அங்குள்ள மக்கள் தமது விருப்பப்படி முதலமைச்சரையும், ஏனைய உறுப்பினர்களையும் தெரிவு செய்து கொள்வதற்கு முடிந்தமை முக்கியமான வரலாற்றுத் திருப்பு முனை என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சொல்வேனியா குடியரசின் அரசமைப்பு நீதிமன்ற நீதிபதி பேராசிரியர் ஏனர்ஸ்ட் பெட்ரிக் குடன் நேற்று வெள்ளிக்கிழமை நீதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், நாட்டில் அதிகாரப் பகிர்வைச் சில இனவாத – தீவிரவாத சக்திகளும், கட்சிகளும் பலமாக எதிர்த்து வருகின்ற போதிலும், அதனை வரவேற்கும் மிதவாத மற்றும் நடுநிலை பேணும் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் உள்ளதென்பதை ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுளார்.
1983 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஜூலைக் கலவரத்தைத் தொடர்ந்து இந்தியாவின் ஏற்பாட்டில் அதி காரப் பகிர்வுக்கு வழிகோலிய அரசமைப்பின் 13ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், போர்க்கால சூழ்நிலையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் அதனை வடக்கு – கிழக்கில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்கியதாகவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன் உலகின் ரோமன் டச் சட்டம் நடைமுறையில் உள்ள நாடுகளில் இலங்கையும் குறிப்பிடத்தக்கது எனக் கூறியதோடு, இங்கு வடபகுதியில் நிலப்பிரச்சினைகள் முதலான விடயங்களில் தேசவழமைச் சட்டமும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை முஸ்லிம் விவாக,விவாகரத்துச் சட்டமும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியான தேர்தல் ஒன்றின் ஊடாக முதன் முதலாகத் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபை தனது பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுமென நம்பிக்கை அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டபோது, அதன் முதலமைச்சர் பதவியை வகிக்கும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் மிகவும் திறமையானவர் எனத் தாம் அறிந்து வைத்திருப்பதாக நீதிபதி எனர்ஸ்ட் பெட்ரிக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்கள் தொடர்பிலும் பேராசிரியர் பெட்ரிக் அமைச்சர் ஹக்கீமிடம் இருந்து உரிய விளக்கங்களை பெற்றுக்கொண்டார்.
கற்பழிப்பு, வயது குறைந்தோருக்கிடையிலான திருமணம் என்பவற்றின் விளைவினால் ஏற்படக்கூடிய மன உளைச்சல்கள், ஏனைய உள, உடல் ரீதியான பாதிப்புக்கள் மற்றும் ஓரினத் திருமண பந்தம் தொடர்பாக எழும்பும் மனித உரிமைக் குழுக்கள் பிரச்சினைகள் பற்றியும் பரஸ்பரம் கருத்துக்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் நீதியமைச்சின் செயலாளர் திருமதி. கமலினி டி சில்வா, மேலதிக செயலாளர் குமார் ஏக்கரத்ன, வெளிவிகார அமைச்சின் அதிகாரிகள், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் பங்குபற்றினர்.
















