பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையில் வத்திக்கானிலுள்ள சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆராதனைகளின் போது சமாதானத்தின் அடையாளமாக பறக்கவிடப்பட்ட இரு வெள்ளைப் புறாக்கள் கடல் பறவையொன்றாலும் காகம் ஒன்றாலும் தாக்கப்பட்டுள்ளன.
மோதல்கள் இடம்பெற்றுவரும் உக்ரேனில் சமாதானம் நிலைபெறுவதற்கு அடையாளமாக மேற்படி சதுக்கத்தில் அமைந்திருந்த அபொஸ்ரோலிக் மாளிகை மாடத்தில் பாப்பரசரின் அருகே நின்ற இரு சிறுவர்களால் இரு புறாக்கள் பறக்கவிடப்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உக்ரேனில் இடம்பெற்ற பிந்திய வன்முறை மோதல்களில் குறைந்தது மூவர் உயிரிழந்துள்ள நிலையில், அந்நாட்டில் சமாதானம் ஏற்படுவதற்காக பாப்பரசர் பிரார்த்தனைகளை மேற்கொண்ட சமயத்திலேயே இந்தப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
உக்ரேனில் வன்முறை மோதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளின் மூலம் சமாதானம் நிலைபெறச் செய்யப்பட வேண்டும் என இதன் போது பாப்பரசர் அழைப்பு விடுத்தார்.
ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றை கைவிட உக்ரேன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் தீர்மானித்ததையடுத்து, அவரது தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் அந்நாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
















