ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag )அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக தியாகி முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் திறந்துள்ள அரசியற் செயற்பாட்டு வெளியுள் பிரவேசித்துள்ள தமிழினத்தின் உரிமைப்போராட்டமானது சிறீலங்கா மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து அனைத்துலகப் பரப்பில் காத்திரமாகத் தடம்பதித்துள்ளதை தமிழினம் மனம்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமிழ்மக்களும் தமது உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்து எட்டப்பட்ட இந்தக் களத்தை மேலும் வலுவுள்ளதாக்கிக் காத்திரமாக நகர்த்திச் செல்லும் கடப்பாடு புலம்பெயர்ந்த எமக்கானது என்பதில் இருவேறு கருத்திருக்கமுடியாது.
காலம்காலமாக அடிபட்டு உதைபட்டு அழிவுகளைச் சந்தித்து எமது துயர்நிலையை வெளிப்படுத்திய போதெல்லாம் வாழாதிருந்த உலகு, 2009 முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனஅழிப்பின் பின்னரான காலப்பகுதியில் சிங்கள சிறீலங்கா அரசினது மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மானிடத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்பில் உரையாடத் தலைப்பட்டுள்ளது.
சிங்களத்தின் பொய்யுரையை நம்பியதன் விளைவை இப்போது உலகு அனுபவிக்கத் தொடங்கியுள்ள வேளையிலேயே தமிழினத்தினது நிலையை மெதுவாகப் புரிந்துகொள்ள முயல்கிறது. அதன் விளைவாகவே மனிதஉரிமைகள் மீறப்பட்டமை இனஅழிப்பை மேற்கொண்டமை என்பவற்றுக்குப் பொறுப்புக்கூறுமாறு சிறீலங்காவினது எதேச்சதிகார ஆட்சியாளர்களை கேட்பதும் இறுக்கமற்ற தீர்மானங்களை முன்வைப்பதுமாக இவர்கள் நகரும் இக்காலத்தில் எதிர்வரும் 2014 மார்ச் 3ம் நாள்முதல் 27ம் நாள் வரை ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பினுடைய 25வது கூட்டத்தொடர் ஜெனீவாவிலே இடம்பெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற அமர்வுகளைவிட இந்த அமர்வானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஈழத்தீவிற்கான மனித உரிமை ஆணையாளரின் பயணத்தின் பின்னர் நடைபெறும் அமர்வென்ற வகையிலும் இலங்கையாட்சியாளர் மீது குறிப்பாகச் சக்திவாய்ந்த சில மேற்குலகநாடுகளின் குரல்தரவல்லவர்களால் முன்மொழியப்படும் அனைத்துலக விசாரணை அவசியம் என்ற கருத்துநிலை என்பவற்றிற்கு வலுச்சேர்க்க வேண்டுமாயின் தமிழர்களாகிய நாம் ஐநாமுன்றிலிலே அணிதிரள வேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும்.
தம்மை அர்ப்பணித்து எம்மிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் நாடுகளில் உள்ள ஜனநாயகத் தளத்தைப் பயன்படுத்தி முன்நகர்த்துவதொன்றே எந்த வினவுதலுக்குமப்பால் தமிழினத்தின் விடுதலையொன்றே தம்முயிர் மூச்செனக்கொண்டு தம்மை அர்பணித்தோருக்காற்றும் கைமாறாகும்.
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு அழுத்தத்தை கொடுக்கும் நோக்கில், தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு சர்வதேசம் முனைந்துள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் நடைபெறும் காலகட்டத்தில் மார்ச் மாதம் 10ம் நாள், தமிழர்கள் அனைவரும் ஐ.நா முன்றிலில் அணிதிரண்டு உரிமைக் குரல் எழுப்ப வேண்டும்.
















