நாளைய தினம் 15-2-2014 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில், யாழ் முனியப்பர் கோவில் முன்றலில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இப் போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்குவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேற்படி போராட்டம் காணாமல் போனவர்கள் தொடர்பாக பொறுப்புக் கூறலை வலியுறுத்தியும், இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம், நில அபகரிப்பை தடுத்து நிறுத்துதல், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரணமான ஆதரவை வழங்குவதுடன், அனைத்து மக்களையும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இடம்பெயர்ந்தவர்களது மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி அம் மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதனை தடுப்பதற்காக அரச தரப்பு தனது இராணுவ இயந்திரம் ஊடாக கடுமையான முயற்சிகளை மேற் கொண்டுவருகின்றது. இந்நிலையில் மக்கள் அரசினதும், இராணுவத்தினதும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டமெனவும், அவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாறாது போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டம் வெற்றிகரமாக இடம்பெற ஒத்துழைக்குமாறும் மக்களை கேட்டுக் கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















