கர்நாடக இடைத்தேர்தல் – முதல் மந்திரி குமாரசாமி மனைவி அபார வெற்றி

கர்நாடக மாநில சட்டசபை இடைத்தேர்தலில் முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தினார்.

கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான எடியூரப்பா, பல்லாரி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான ஸ்ரீராமுலு, மண்டியா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி.யான புட்டராஜு ஆகியோர் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதைதொடர்ந்து, தங்களது எம்.பி. பதவிகளை அவர்கள் மூவரும் ராஜினாமா செய்தனர். இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

கடந்த சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் மந்திரி குமாரசாமி சன்னப்பட்னா தொகுதி எம்.எல்.ஏ.வாக நீடிக்கப் போவதாக அறிவித்தார். இதனால், அவர் வெற்றிபெற்ற மற்றொரு தொகுதியான ராமநகரா சட்டசபை உறுப்பினருக்கான இருக்கை காலியாக இருந்தது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியமகவுடா இறந்ததால் ஜம்கன்டி சட்டசபை உறுப்பினருக்கான இருக்கையும் காலியானது.

பாராளுமன்ற இடைத்தேர்தலுடன் இந்த 3 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்தன.

கடந்த மூன்றாம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் படிப்படியாக வெளியாகி வரும் நிலையில் ராமநகரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தினார்.

இதேபோல், ஜமகன்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நியமகவுடா 39 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கண்ட இரு சட்டசபை தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களின் வெற்றியை பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!