டெல்லி சட்டபேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மேலும் இந்த மசோதாவை நிறைவேற்ற 1000 முறை கூட முதல்வர் பதவியை தியாகம் செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டபேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனால் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியபடி, அவரது அமைச்சரவை கூடி முதல்வர் பதவியை இராஜினாமா செய்வது என முடிவெடுத்தது. அதன்படி தனது இராஜினாமா கடிதத்தை ஆளுநரை சந்தித்து அவர் அளித்தார்.
ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் கெஜ்ரிவால் பேசும்போது, ஜன் லோக்பால் மசோதாவை ஆதரிக்காமல் காங்கிரசும், பா.ஜனதாவும் கூட்டு சதி செய்துவிட்டன. எரிவாயு விலை நிர்ணயம் விவகாரத்தில் ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதால் காங்கிரசும், பா.ஜனதாவும் நெருக்கடி தந்ததுடன், ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய விடாமல் தடுத்துவிட்டன.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் இதனை தவிர்ப்பதற்காகவே அனைவரும் சேர்ந்து என்னை வெளியேற்றிவிட்டனர் எனக் குறிப்பிட்டார்
மேலும், ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றி ஊழலை ஒழிக்கும் முயற்சிக்ககாக 1000 முறை கூட முதல்வர் பதவியை இராஜினாமா செய்வேன் என அவர் தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்று 48 நாட்களே ஆன நிலையில் அவர் இராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















