எதிர்வரும் மாhச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்க் பிராந்திய வலயத்தைச் சேர்ந்த மூன்று நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இவ்வாறு அங்கம் வகிக்கின்றன.
இரண்டு தடவைகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானும், மாலைதீவும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டதடன், இந்தியா எதிராக செயற்பட்டுள்ளது,
தற்போது மாலைதீவில் நடைபெற்று வரும் சார்க் பிராந்திய வலய வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் தொடர்பில் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ளது.
மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிராந்திய வலய நாடுகளைப் போன்றே, உறுப்புரிமையற்ற நாடுகளுக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் தெளிவுபடுத்தி ஆதரவு திரட்டும் முனைப்புக்களில் இலங்கைப் பிரதிநிதிகள் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இம்முறை மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பாரியளவில் விரிசல் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களிக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
















