பகலிலும், இரவிலும் பறக்கும் திறனுடைய உலகின் முதல் சூரிய சக்தி விமானம் ‘சோலார் இம்பல்ஸ்‘ 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா வரவிருக்கிறது.
தன் முதுகில் 12 ஆயிரம் சோலார் பேனல்களைச் சுமந்திருக்கும் சோலார் இம்பல்ஸ் முழுக்க முழுக்க சூரிய சக்தியால் மட்டுமே இயங்கக் கூடியது.
முந்தைய சோலார் கண்டுபிடிப்புகளால் இரவில் பறப்பது சிரமம். அந்தத் தடையையும் தகர்த்து வெற்றிகரமாக வானில் உலா வரும் திறனை சோலார் இம்பல்ஸ் பெற்றிருக்கிறது.
சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் தயாரித்த இவ்விமானத்துக்கும் நிறுவனத்தின் பெயரே இடப்பட்டிருக்கிறது. “வான்வெளி களில் கையொப்பம்” என்ற பெயரில் 2015ம் ஆண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் பறந்து முடிக்கும் திட்டத்தை சோலார் இம்பல்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஆந்ரே போர்ஸ்ச்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கர்டு ஆகியோர் வகுத்துள்ளனர்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 2015ம் ஆண்டு ஏப்ரலில் இந்தியாவுக்கு வரவிருக்கிறது. இந்த சூரிய சக்திப் பறவை.
இதுகுறித்து ஆந்ரே போர்ஸ்ச்பெர்க் கூறுகையில், இந்தியாவின் மேற்குக்கடற்கரை வழியாக ஆசியாவுக்குள் நுழையவிருக்கிறது சோலார் இம்பல்ஸ். எந்த இந்திய நகரத்தில் முதலில் தரையிறங்குவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
மேலும் இந்தியாவில் கூட்டாளிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்றும் இந்தியாவிலிருந்து மியான்மர் செல்லும்முன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை விமானநிலையம் ஒன்றில் தரையிறங்கவும் திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
12 ஆயிரம் தகடுகள்
புதிய தொழில்நுட்பத்தை உலகம் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பயணம் அமையும். விமானத்தின் எடை 2,740 கிலோ. மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.
135 மைக்ரான் தடிமன் (மனித மயிரிழையின் தடிமன்) கொண்ட 12 ஆயிரம் சூரியசக்தித் தகடுகள் இவ்விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. 144 பக்கவரிசைகளில் 50 செ.மீ. இடைவெளியில் நேர்த்தியாக இத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தின் மேல்புறம் சூரியசக்தித் தகடுகளாலும், அடிப்பாகம் மிக இலகுவான செயற்கை இழையாலும் (அல்ட்ரா லைட் பேப்ரிக்) வடிவமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் இறகுப் பகுதி முழுக்க கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகப் பயணம்
உலகம் முழுவதும் சுற்றி முடிக்கும் திட்டம் இன்னும் 3 மாதங்களில் தொடங்கி விடும். 20 முதல் 25 இரவு மற்றும் பகல் என்ற அளவில் மொத்த பயண நாள்கள் அமைந்திருக்கும்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து இப்பயணம் தொடங் கும். இவ்விமானத்தின் முதல் பயண நாடு இந்தியாதான். இந்தியாவில் இரு நகரங்களில் தரையிறங்கத் திட்டமிட்டிருக்கிறோம். பசிபிக் கடல்பகுதியில் பறக்கும் 5 பகல் 5 இரவுகள் என்பதுதான் இவ்விமானத்தின் நீண்ட பயண நாள்களாக இருக்கும்.
தொழில்நுட்பத்திறனை அதிகபட்சம் எவ்வளவு முடியுமோ அவ்வ ளவு பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கை நோக்கி இளம் தலைமுறையை ஈர்ப்பதுதான் எங்கள் பயணத்தின் நோக்கம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நம்மால் விமானத்தில் பயன்படுத்த முடியும் என்கிறபோது அதனைத் தரையிலும் பயன்படுத்த முடியும். தரையில் அதனை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது இன்னும் எளிது.
மத்தியக் கிழக்கு நாட்டில் உலகப் பயணத்தைத் தொடங்கும் இவ்விமானம் முதல் நாடாக இந்தியாவை நோக்கிப் பயணிக்கிறது என்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புதிய இலக்கை ‘சோலார் இம்பல்ஸ்’ எட்டியிருக்கிறது. உலகம் முழுவதும் சுற்றி முடிக்கும் திட்டம் இன்னும் 3 மாதங்களில் தொடங்கி விடும் எனவும் கூறியுள்ளார்.
















