‘கிழக்கில் முதலீடு செய்யுங்கள்’ எனும் வேலைத் திட்டம் திருகோணமலையில் ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட வேலைகளை கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நசீர் அஹமட் ஆரம்பித்துள்ளார்.
இதன் முதற் கட்டமாக மலேசிய நாட்டு முதலீட்டாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.
அமைச்சர் நசீர் அஹமட் அழைப்பின் பேரில் திருகோணமலைக்கு விஜயம் செய்த மலேசிய முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம மற்றும் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.பத்மநாதன் ஆகியோரை புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
மலேசிய முதலீட்டாளர் குழுவில் கலாநிதி முஹமட் தாவூத் பகார், சைய்ட் நிஸாம் சைய்ட் ஜலால்தீன், ராஷி பஹ்லவி அப்துல் அஸீஸ் ஆகியோருட்பட இன்னும் பலர் இடம்பெற்றிருந்தனர்.
பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை கட்டி எழுப்பும் நோக்கில் கிழக்கு மாகாணத்தில் வெளிநாட்டு முதலீடுகளைச் செய்து இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையுமென அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் கிழக்கு மாகாண ஸ்திரத் தன்மை மற்றும் வள வாய்ப்புகள் பற்றி மலேசிய முதலீட்டாளர்களுக்கு எடுத்து விளக்கினர்.
















