இலங்கையில் நடைபெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை
ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என சர்வதேச சட்டத்தரணிகள் பேரவையின் மனித உரிமை நிறுவகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என சர்வதேச சட்டத்தரணிகள் பேரவையின் இணைத் தலைவர் பார்நோயிஸ் ஹெலனா கென்னடி தெரிவித்துள்ளார்.
மேலும் யுத்த நிறைவின் பின்னர் நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை நீதித்துறையினரால் உரிய தீர்வுகளை வழங்க முடியாத அநேக சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதே அமைப்பின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மை, சர்வதேச சுயாதீன யுத்தக் குற்றச் செயல் விசாரணை போன்ற காரணிகளை உள்ளடக்கிய வகையில் இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் அமைய வேண்டுமென சட்டத்தரணிகள் பேரவையின் மனித உரிமைகள் நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுபான்மை சமூகத்தவர், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீதான தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பாரியளவிலான மனித புதை குழிகள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கிரமமான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், சர்வதேச சட்டத்தரணிகள் பேரவையும் சில பரிந்துரைகளை செய்துள்ளது.
















