
நெல்லையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. சென்னையில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது.
ராஜீவ் சிலைகள் உடைக்கப்பட்டன. பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் 2 கட்சியினரிடையே மோதல் போக்கு உருவானது.
குமரி மாவட்டம் திருவட்டார் ஆற்றூரில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரசார் எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ் தலைமையில் அங்கு திரண்டனர்.
நாம் தமிழர் கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக மேடை அருகே வந்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பொதுக்கூட்ட மேடை சூறையாடப்பட்டது.
இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நெல்லையில் இன்று போராட்டத்தில் குதித்தனர். தென் மண்டல அமைப்பாளர் வக்கீல் சிவகுமார் , மாவட்ட அமைப்பாளர் ராம்குமார், மாநகர அமைப்பாளர் செய்யதலி, மாநகர அமைப்பாளர் நயினார், கூடங்குளம் கணேசன் உள்பட ஏராளமானோர் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு திரண்டனர்.
ரயில் மறியல் செய்வதற்காக நிலையத்திற்குள் புகுந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே கட்சி பொறுப்பாளர் திருப்பதிராஜா தலைமையில் சிலர் சந்திப்பு ரெயில் நிலையத்திற்குள் புகுந்தனர். அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் நாம் தமிழர் கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ் ஆகியோரின் உருவபொம்மைகளை எரித்தனர். போலீசார் அதனை தடுத்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த போராட்டம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 44 பேரை பொலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் நெல்லையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
















