ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரி மைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தலைமையில் ஜெனிவா நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன் இதன்போது உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் சில நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் தாக்கல் செய்யப்படவுள்ளன.
அந்தவகையில் இம்முறை இலங்கைககு எதிராகவும்அமெரிக்காவினால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் அமெரிக்க , பிரிட்டன் தரப்பும் அதனை எதிர்க்கும் இராஜதந்திர செயற்பாடுகளில் இலங்கை தரப்பும் மும்மரமாக ஈடுபட்டுள்ளன.
ஆரம்ப அமர்வில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர். அத்துடன் மனித உரிமைப் பேரவையின் தலைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தலைவரும் முதல் நாள் அமர்வில் உரையாற்றவுள்ளனர்.
அத்துடன் இலங்கையின் சார்பில் இலங்கை தூதுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நாளை மறுதினம் புதன்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்றவுள்ளார்.
மேலும் முதல்நாள் அமர்வில் அமெரிக்கா பிரிடடன் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ள நிலையில் அவர்கள் தமது உரையில் இலங்கை விவகாரம் தொடர்பில் உரையாற்றவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 25 ஆம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை உரையாற்றவுள்ளதுடன் விசேட அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.
தற்போது பீம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மியன்மார் சென்றுள்ள இலங்கை தூதுக்குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மியன்மாரில் இருந்தவாறு நாளை செவ்வாய்க்கிழமை ஜெனிவா பயணமாகவுள்ளார்.
அத்துடன் தூதுக்குழுவில் இடம்பெறுகின்ற ஏனைய உறுப்பினர்களான ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கஇ சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோ மற்:றும் ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ஆகியோர் நேறறும் இன்றும் ஜெனிவா செல்வதற்கு ஏற்பாடாகியுள்ளது. இது இவ்வாறு இருக்க இலங்கை தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க எதிர்வரும் எட்டாம் திகதி ஜெனிவா செல்லவுள்ளார்.
மேலும் எதிர்வரும் புதன்கிழமை மனித உரிமை பேரவையில் அமைச்சர் பீரிஸ் உரையாற்றுவதற்கு முன்னர் அமைச்சர் தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த சந்திப்பின்போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறை அமைக்கப்படவேண்டும் என்ற நவநீதம் பிள்ளையின் கோரிக்கை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை இந்த சந்திப்பின்போது வெளியிடவுள்ளது.
அதேபோன்று இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பாகவும் நவநீதம் பிள்ளையுடன் கலந்துரையாடப்படவுள்ளதுடன் இந்த விடயத்தில் இலங்கை தனது எதிர்ப்பையும் வெளியிடவுள்ளது.
இதேவேளைஇ இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்பட மாட்டாது என்றே தெரியவருகின்றது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜெனிவாவில் சுயாதீன விசாரணையை கோருவோம் என்று பிரிட்டன் அமைச்சர் பரனேஸ் வர்சி தெரிவித்திருந்த கருத்தும் சர்வதேச விசாரணை கோரப்படமாட்டாது என்ற விடயத்தை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இது இவ்வாறு இருக்க சர்வதேச அரங்கில் முக்கிய நாடுகளாக கருதப்படும் சீனாவும் ரஷ்யாவும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்திருந்ததுடன் இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தன. இந்த ஆதரவு நிலைப்பாடுகளும் சர்வதேச விசாரணயை தவிர்த்து சுயாதீன விசாரணையை கோருவதற்கான அடிப்படையாக அமைந்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்படி ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் இம்முறை கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் சர்வதேச விசாரணை என்ற விடயம் இடம்பெறாது என்றும் சுயாதீன விசாரணை என்ற விடயமே உள்ளடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை அரசாங்கமும் யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்த கால அவகாசத்தை மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையில் அரசாங்கம் பாரியளவு முன்னேற்றத்தை வெளிப்படுத்திவருவதாகவும் மேலும் முன்னேற்றத்தை வெளிப்படுத்த கால அவகாசம் தேவை என்றும் இலங்கை அரசாங்க தரப்பில் கோரப்படவுள்ளது.
எவ்வாறெனினும் மார்ச் மாதம் 22 ஆம் திகதியளவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதுடன் மார்ச் மாதம் 27 ஆம் திகதி வியாழக்கிழமை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையாக அமெரிக்கா ஜெனிவா மனித உரிமைப் பேரவை பிரேரணையை கொண்டுவரவுள்ளது. இதற்கு முன்னர் 2013 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அந்தவகையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு உறுப்பு நாடுகளின் ஆதரவை பெறும் நோககில் பிரிட்டனும் அமெரிக்காவும் பாரிய இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. அதேவேளை மறுபுறம் இலங்கையும் உறுப்பு நாடுகளிடம் இலங்கைக்கு ஆதரவு கோரி படையெடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அண்மையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்ததுடன் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை தோற்கடிக்க ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தார்.
எனினும் இலங்கைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இந்தியா எவ்விதமான உத்தரவாதத்தையும் வழங்காத நிலையில் சீனா இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. அத்துடன் ரஷ்யாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று அண்மையில் இலங்கைககு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தது.
இந்தியாவானது கடந்த 2012 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்டிருந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதுமட்டுமன்றி அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சர்களும் மனித உரிமைப் பேரவையின் பல்வேறு உறுப்பு நாடுகளுக்கும் விஜயம் செய்ததுடன் ஆதரவு கோரும் படலத்தையும் மேற்கொண்டிருந்தனர்.
இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை கடந்தவாரம் வெளியிட்டிருந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியம் என்று கூறியிருந்தார். ஆனால்இ இலங்கை அரசாங்கம் உடனடியாகவே நவநீதம் பிள்ளையின் கோரிக்கையை நிராகரித்திருந்ததுடன் அவரின் அறிக்கைக்கு கடும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தது.
இதேவேளை மனித உரிமை பேரவையின் முதல்நாள் அமர்வில் அமெரிக்கா, பிரிட்டன் , கனடா, பிரான்ஸ், ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் ரஷ்யாவின் வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி வி. லவ்ரவ், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் டோரன்ட் பேபியஸ், அமெரிக்காவின் அமைச்சரவை உறுப்பினர் சமந்தா பவர், பிரிட்டனின் இராஜாங்க மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹியுகோ ஸ்வயர், கனடாவின் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் லின்னி யெலிச் உள்ளிட்டோர் முதல் நாள் அமர்வில் உரையாற்றவுள்ளனர்.
அமைப்புக்களை பொறுத்தவரையில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் அன்டர்ஸ் ஜோன்ஸனும் முதல் மூன்று நாள் அமர்வில் உரையாற்றவுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடந்த வருடம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அதன்போது நாட்டின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மதிப்பீடுகளை அவர் மேற்கொண்டிருந்தார். மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் டாக்டர் சலோகா பெயானி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்திருந்தன. எதிராக 13 நாடுகள் வாக்களித்திருந்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
அதேபோன்று கடந்த 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்திருந்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்திருந்தன.
அந்தவகையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கின் றமையானது இலங்கையின் உள்ளக நல்லிணக்க செயற்பாடுகளை அது குழப்பிவிடும் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டுவருகின்றது.
இதேவேளை மியன்மாரில் இடம்பெறவுள்ள பீம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் கலந்து கொள்ளவுள்ளதுடன் அந்த மாநாட்டில் வைத்து இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
















