இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்படவுள்ள அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் தொடர்பில் தமிழர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இந்தத் தீர்மானம் இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கிச் சர்வதேச விசாரணையில் இருந்து அதனைத் தப்பிக்க வைக்கும் முயற்சி என்று தமிழர் தரப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட உள்ள உத்தேச தீர்மானம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் சர்வதேச விசாரணை தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என வடக்கு கிழக்கில் உள்ள சிவில் சமுகப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இது இலங்கை அரசுக்கு மேலும் அவகாசத்தை வழங்கியுள்ளதுடன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நிகரான வகையிலேயே தற்போதைய தீர்மானமும் அமைந்துள்ளதாகப் பிரிட்டன் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
















