தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்காலுக்கு தெற்காக உள்ள நந்திக்கடல் ஏரிக்கு அருகில் மனித எலும்புக்கூடுகள் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
பச்சை உரைப்பை ஒன்றில் கட்டியவாறு நெற்றிப் பகுதியில் குண்டு துளைத்த துவாரத்துடன் மண்டையோடு ஒன்று இருப்பதாக அப்பகுதி தொழிலாளியொருவர் தெரிவித்தமைக்கு அமைய செவ்வாய்க்கிழமை (04) அவ்விடத்திற்கு சென்று பார்த்தேன்.
இதன்போது, அப்பிரதேசங்களில் பெருமளவு மனித எச்சங்கள் காணப்பட்டமையினைக் கண்ணுற்றேன். அத்துடன், இவ்வாறு காணப்படும் மனித எச்சங்கள் உரைப்பையில் கட்டப்பட்ட நிலையில் காணப்படுவதுடன், சில மண்டையோடுகளில் தூப்பாக்கியால் சுடப்பட்ட துவாரங்களும் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது எனக் கூறினார்.
அத்துடன், அந்த பிரதேசத்தில் 30 அடி நீளமான நிலப்பகுதியில் மனித எச்சங்கள் புதைக்கப்பட்ட தடயங்கள் தென்படுவதாகவும் இவற்றுக்குள் இறுதி யுத்தத்தில் பலியான விடுதலைப் புலிகளின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாக அவர் மேலும் கூறினார்.
















