தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பராமரித்து வந்த யானை தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாகக் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் விலங்குகளை நேசிப்பவர். அவர் ஒரு புலி, ஒரு கரடி, ஒரு யானை என்பனவற்றை வளர்த்து வந்தார்.அவர் உயிரிழக்கும் வரை புலியைத் தன்னுடன் வைத்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.ஆனால் அவர் வளர்த்து வந்த கரடிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் வளர்த்த யானை மிகவும் அழகானது.அது தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.2009 இல் போர் தீவிரம் பெற்றபோது, விடுதலைப் புலிகள் தம்மால் எடுத்துக் கொண்டு செல்லக் கூடியவற்றை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அப்போது இந்த யானையைக் கைவிட்டுச் சென்றனர்.அதிஷ்டவசமாக அது இறுதிப்போரில் கொல்லப்படாமல் தப்பிக்கொண்டது.
அந்த யானை கிளிநொச்சிக் காட்டுக்குள் தப்பி ஓடியிருந்தது. பலாலி இராணுவ முகாமில் இருந்து சென்ற கொண்டிருந்த படையினரின் கண்களில் அது தற்செயலாகப்பட்டது. அதை அவர்களை தம்முடன் கொண்டு சென்று பின்னர், தெஹிவளை மிருக காட்சிச்சாலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தெஹிவளைக்கு அனுப்பப்பட்ட அந்த யானை, பின்னர் பின்னவெல சரணாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இளம் பெண் யானையான அதற்கு மெனிகா என்று அங்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.அதற்குத் தற்போது 22 வயதாகிறது. பிரபாகரனுடன் இருந்த போது அது எப்படி அழைக்கப்பட்டதென்று தெரியவில்லை என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.
















