லோக் ஆயுக்தா அமைப்பை காகிதப் புலி போன்று காலில் போட்டு மிதிப்பதா? ஸ்டாலின் கண்டனம்

லோக் ஆயுக்தா அமைப்பை ஒரு காகிதப் புலி போன்று காலில் போட்டு மிதிப்பதா என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தி.மு.க தலைவர் மு. க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும்தெரிவித்ததாவது,

“தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு 128 நாட்கள் ஆன பிறகு, ‘பவர்’ இல்லாத லோக் ஆயுக்தா சட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு இப்போது ‘பல்’ இல்லாத விதிகளை உருவாக்கியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடிப்படை நோக்கத்தையே உருக்குலைத்து கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.

கமிஷன்’, ‘கரெப்ஷன்’, ‘கலெக்‌ஷன்’ என்று மெகா ஊழலில் மூழ்கி, கஜானாவைச் சுரண்டி கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், 54 மாதங்கள் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்காமல் உறங்கியது.

பிறகு உச்ச நீதிமன்றம் அரசின் தலையில் ஓங்கி ‘குட்டு’ வைத்து, கெடு விதித்த பிறகு வேறு வழியில்லாமல் ஊழலை ஒழிப்பதற்கு எந்த ஒரு வலுவான அதிகாரமும் இல்லாத லோக் ஆயுக்தா மசோதாவை அவசர அவசரமாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.

அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் பங்கேற்று, லோக் ஆயுக்தா மசோதா எத்தகைய உயிரற்ற வெறும் எலும்புக்கூடாக இருக்கிறது என்பதை எல்லாம் விளக்கிப் பேசி, மசோதாவை பேரவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்புமாறு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்தினேன். ஆனால் அதை ஏற்க மனமின்றி அந்த மசோதாவை தடுமாற்றத்தோடு நிறைவேற்ற முயன்ற போது, தி.மு.க. சார்பில் வெளிநடப்பு செய்து ‘பொம்மை’ லோக் ஆயுக்தாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதிமுக அமைச்சர்கள் மீதோ, முதல்வர் மீதோ எந்தவொரு ஊழல் விசாரணையும் நடத்தி விடாத அளவில் ஒரு லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கியது சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆர்வலர்களுக்கு பேரதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட லோக் ஆயுக்தாவுக்கும் கூட உரிய காலத்தில் விதிகளை உருவாக்காமல், தலைவரையும் நியமிக்காமல் அதிமுக அரசு தாமதம் செய்தது. மீண்டும் உச்ச நீதிமன்றம் எச்சரித்த பிறகு இப்போது லோக் ஆயுக்தா விதிகளை உருவாக்கியிருக்கிறது. ஊழல் புகார்கள் மீது ரகசிய விசாரணை நடத்த வேண்டும்; புகாருக்குள்ளான ஊழல்வாதி குறித்து பத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரிவிக்கக் கூடாது; விசாரணை நடக்கும் போதோ அல்லது விசாரணை முடிந்த பிறகோ கூட அந்த விவரங்களை தெரிவிக்கக் கூடாது என்றெல்லாம் வகுத்துள்ள விதிகள் அதிமுகவில் உள்ள ஊழல் அமைச்சர்களையும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முதல்வர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவும் வகுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேடுதல் குழு உறுப்பினர்களை எந்த நேரத்திலும் மாற்றலாம் என்று கொண்டு வரப்பட்டுள்ள விதி, அரசுக்கு விரும்பாத யாரையும் தேடுதல் குழு லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவராகவோ, உறுப்பினராகவோ பரிந்துரை செய்து விடக்கூடாது என்ற இழிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரிகிறது.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கும், ஊழல் ஒழிப்புப் பணியிலும் ஈடுபட வேண்டிய லோக் ஆயுக்தா அமைப்பு ஊழல் விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என்று கூறியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடித்தளத்தையே தகர்த்து எறியும் அ.தி.மு.க. அரசின் கேடு கெட்ட நடவடிக்கை மட்டுமல்ல – ஊழலே எங்கள் வாழ்க்கையாக இருக்கும் போது நாங்கள் எப்படி அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பது போல் அமைந்துள்ளது.

ஆகவே, லோக் ஆயுக்தா அமைப்புக்கு நேர்மையான ஒரு தலைவரை நியமிக்கவும், ஊழல்வாதிகள் மீது நடைபெறும் விசாரணைகள் ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக பொதுமக்களுக்குத் தெரியும்படி நடக்கவும் ரகசிய விசாரணை என்ற விதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், லோக் ஆயுக்தா அமைப்பை ஒரு ‘காகிதப்புலி’ போல் ஆக்கி காலில் போட்டு மிதிக்க நினைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனங்கள்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!