ஐ.நா அமர்வினை எமது பிரச்சினைகளுக்கான தீர்வுக்களமாக நாம் பார்க்கமுடியாது. அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும் என்ற அடிப்படையில் ஐ.நா அமர்வினை நாம் மருத்துவிச்சியாக பார்க்கமுடியுமே தவிற பிள்ளை பெறும் தாயாக பார்க்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்.
எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நாமே தீர்வுகாண வேண்டும். அதற்காக சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பி பயனில்லை. நாம் ஆரம்பத்தில் இருந்தே தீர்க்கதரிசனமாக கூறி வந்த உண்மை சரியென மறுபடியும் ஒரு முறை உணர்த்தப்பட்டிருக்கின்றன.
அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும்! என்பது போல், எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பிரதான பொறுப்பு தமிழ் பேசும் கட்சிகளின் தலைமைகளுக்கே உண்டு.
நாம் சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பியிருக்க முடியாது. தேவையென்றால், பிரசவத்தின் போது ஒரு மருத்துவிச்சியின் கடமையை ஆற்றுவது போல், சர்வதேச நாடுகள் முன்வந்தால் அதை வரவேற்கலாம்.
ஏனெனில், எமது மக்கள் சுமந்த வலிகளையும், வதைகளையும் நாம் மட்டுமே உணர்வோம். எனவே, எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்புணர்வு எமக்கு மட்டுமே இருக்க முடியும்.
















