புகார் செய்தால் புலிகளா? இன்னும் ஓயாத இலங்கை அராஜகம்

un_geneva_flags

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தைக் கண்டு அரண்டு கிடக்கிறது இலங்கை. அதன் வெளிப்பாடாக இப்போது தமிழர்கள் மீது பல்வேறு புகார்களைச் சுமத்தி வருகிறது இலங்கை.

கடந்த 15, 16 திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் கோயில் திருவிழா நடந்தது. இந்தத் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் இந்திய பக்தர்களுக்கான அழைப்பு கடிதம் சிவகங்கை மறைமாவட்ட நிர்வாகத்துக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுப்பப்படும். இந்த ஆண்டுக்கான அழைப்பு மிகத் தாமதமாகவே அனுப்பப்பட்டது.

அதேபோல் இந்தியாவில் இருந்து செல்லும் பத்திரிகையாளர்களுக்கான அனுமதிகூட திருவிழாவுக்கு முதல் நாள்தான் இலங்கைத் தூதரகத்தால் வழங்கப்பட்டது.

இத்தனை நெருக்கடிகளுக்குப் பின்னும் 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்தியாவில் இருந்து கச்சதீவுத் திருவிழாவில் பங்கேற்றனர்.கச்சதீவின் அனைத்துப் பகுதிகளிலும் தனது தளத்தை இலங்கை இராணுவம் வலுப்படுத்தி வருவதை அங்கு காண முடிந்தது.ஆண்டுதோறும் இங்கு நடக்கும் திருவிழாவுக்கான அனுமதி உள்ளிட்ட சகல ஏற்பாடுகளிலும் இலங்கை இராணுவத்தின் குறுக்கீடு உள்ளது.

இது குறித்து பேசிய கல்லடித்திடல் பங்குத்தந்தை எல்.அமல்ராஜ்,

வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட யாழ் மறைமாவட்டத்தில் அடங்கியுள்ளது கச்சதீவு. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விழாவில்கூட யார் பங்கேற்க வேண்டும் என்பதை இராணுவம்தான் முடிவுசெய்கிறது.

இறுதிகட்ட போரில் பல ஆயிரம் உயிர்களை இழந்துவிட்ட இலங்கைத் தமிழர்கள், தங்கள் வாழ்வை நிர்ணயிக்க வடக்கு மாகாணத் தேர்தலின் போது ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்தனர். அந்தத் தலைமைக்கு உரிய அதிகாரங்கள் கொடுக்கப்படாத நிலை இன்றும் நீடிக்கிறது. இந்தத் திருவிழாவுக்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. அவர் பங்கேற்பதை இலங்கை இராணுவம் விரும்பவில்லை.

அதேபோல் முன்பெல்லாம் ஒரு வார காலம் நடந்த இந்தத் திருவிழா இரண்டு நாட்களாகக் குறைக்கப்பட்டது. இப்போது அந்த இரண்டு நாட்களும்கூட முழுமையாக நடத்தப்படாமல், ஒரே நாளில் திருவிழாவின் எல்லா நிகழ்வுகளும் முடிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் பல மணி நேரம் கடல் பயணம் மேற்கொண்டும், உயிரைப் பணயம் வைத்தும் இங்கு வரும் இரு நாட்டு பக்தர்களும் நிம்மதியாக வழிபாட்டில் பங்கேற்க முடிவது இல்லை. வரும் காலங்களில் இந்தத் திருவிழாவை கூடுதல் நாட்களில் நடத்துவதுடன், முழுமையாக தமிழர்களின் வசமே இதற்கான பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுதல்” என்றார்.

வழக்கமாக சிலுவைபாடு நிகழ்வுகளின்போது இலங்கைத் தமிழர்களின் கடந்த கால வாழ்க்கை மற்றும் இப்போதைய நிலை குறித்து வழிபாட்டின் மூலம் எல்லோருக்கும் எடுத்துரைக்கப்படும். இந்த ஆண்டு அவ்வாறு எதுவும் கூறப்படாமல், வெறுமனே பிரார்த்தனையாக மட்டுமே இருந்தது.

இரண்டு நாட்கள் நடக்கும் திருவிழாவுக்கே இந்த நிலை என்றால், இலங்கை இராணுவத்தின் கண்காணிப்பு வலயத்தில் வாழ்ந்துவரும் தமிழர்களின் நிலை எப்படி இருக்கிறது என இலங்கைப் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கையில்,

தமிழர்கள் பகுதிகள் இன்றும் இராணுவக் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. மக்களின் காணிகள் (நிலம்) எல்லாம் எடுக்கப்பட்டு, இராணுவத்திடம் உள்ளது. பள்ளிக்கூட நிலங்களைக்கூட இராணுவம் எடுத்துள்ளது. இதனால் 18 பள்ளிகள் தற்போது மரத்தடிகளிலும், சிலரது வீட்டு முற்றங்களிலும் நடத்தப்படுகின்றன.

விளைநிலங்களில் பெரும்பகுதி அவர்கள் வசம் இருப்பதால் விவசாயம் செய்ய வழியில்லை. கடலுக்குச் சென்று மீன்பிடிக்க வழங்கப்பட்ட மண்ணெண்ணெய்யையும் கடந்த ஒரு வருடமாக அரசு நிறுத்திவிட்டது.

இவர்களில் சிலருக்கு வீடு கட்ட அரசு நிதி வழங்கியது. கடும் விலையேற்றத்தால் அந்த நிதி போதவில்லை. இதனால் வீடுகட்ட நினைத்தவர்கள் இன்று இருப்பதையும் இழந்து கடனாளிகளாகத்தான் இருக்கின்றனர். இதனால்தான் சர்வதேச குழுக்களையோ, பத்திரிகையாளரையோ இலங்கை அரசு சுதந்திரமாக அனுமதிப்பது இல்லை.

இப்போது அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரும் தீர்மானத்தைத் திசைதிருப்ப, இலங்கையில் இன்னும் புலிகள் இயங்குகின்றனர் எனக் காட்டும் நடவடிக்கைகளில் இராணுவம் இறங்கியுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர். போலீஸார் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி ஜெயகுமாரி என்பவரையும் அவரது மகள் விபுஷிகா என்பவரையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

ஜெயகுமாரியின் இரு மகன்கள் இறுதிக்கட்ட போரின் போது கொல்லப்பட்டும், ஒருவர் காணாமல் போயும் உள்ளனர். இது குறித்து மனித உரிமை விசாரணைக் குழுவிடம் புகார் செய்திருந்தார். இந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்று இலங்கை இராணுவத்தின் கொடூரங்களை பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, புலிகள் அமைப்பு இன்னும் இயங்குகிறது என்ற தோற்றத்தை உருவாக்க ராஜபக்ச முயன்று வருகிறார் என்றனர். தமிழர்கள் மீதான தாக்குதல்களை ராஜபக்ச இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய அரசு அதுபற்றி வாய் மூடியே கிடப்பதன் காரணம் என்ன?

Tags: , , ,

Leave a Reply