எமது உரிமைகளை சலுகையாக அன்றி உரிமையாகப் பெற்றுக் கொள்வதற்கு ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேல் மாகாண மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேல்மாகாண தமிழ் பேசும் வாக்காளர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும்,
இலங்கையில் மொழியாலும் மதத்தாலும் சிறுபான்மையாகவுள்ள தமிழ் பேசும் மக்களின் மதவுரிமைகள், வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமைகள், நிலவுரிமை, கலாசார உரிமை இத்தனைக்கும் மேலாக தமிழர்களது அரசியல் உரிமைகளையும் இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டுமென்பதற்காக இன்று ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகளின் பேரவையில் உலக நாடுகளும் மனிதவுரிமை நிறுவனங்களும் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எமது உரிமைகளுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குரலில் செயற்படுவதன் மூலமே எமது உரிமைகளுடன் கூடிய வாழ்வை உத்தரவாதப்படுத்துவதற்கான வழிகள் திறக்கப்படும்.
தேர்தல் காலங்களில் ஒரு சில சலுகைகளை அறிவித்து மக்களின் வாக்குகளைத் திருடியபின், அந்த மக்களின் வாக்குகளால் பெற்ற ஆட்சியதிகாரத்தை வைத்தே மக்களை அடக்கியொடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத சூழ்ச்சிக்கு மேல்மாகாண வாக்களார்கள் பலியாகிவிடக்கூடாது.
இந்த நாட்டில் எல்லா உரிமைகளும் எமக்கு உண்டு. உரிமையாக நாம் பெற்றுக்கொள்ள வேண்டியவற்றை ஏதோ இரக்கத்தில் தரும் சலுகைபோல் தந்து உரிமைகளைப் பறித்து எம்மைக் கையேந்துபவர்களாக வைத்திருக்க நினைக்கும் ஆளும் கூட்டணிக்கு வாக்களித்து எம்மை நாமே அடிமைகளாக்கும் அடிமைச்சாசனம் எழுதிக்கொடுக்கப்போகின்றோமா? அல்லது இந்த நாட்டில் கௌரவமான பிரஜைகளாகத் தலைநிமிர்ந்து வாழப்போகின்றோமா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக மேல்மாகாணத் தேர்தல் அமைகின்றது.
தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக இன நலன்களை அரசிற்கு விற்பதற்குக் கவர்ச்சியான வாக்குறுதிகளுடன் தனிச்சின்னத்தில் நிற்பதுபோல் பாசாங்கு செய்து தேர்தல் கால ஏமாற்றுக்களின் மூலம் உங்கள் வாக்குகளைக் கவர முனையும் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அரசின் சிங்கள பௌத்த மேலாதிக்க வெறிக்கு துணைபோவதுடன், சர்வதேச போர்க்குற்ற விசாரணையை எதிர்ப்போம் என்று தமிழின ஒழிப்பிற்கு ஆதரவாகச் செயற்படும் கட்சிகளின் வேட்பாளர்களையும் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
வெளிப்படையாகவும், உறுதியுடனும், தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகப் போராடுகின்ற ஜனநாயக மக்கள் முன்னணிக்கு உங்கள் வாக்குகள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் முழுமையாக வழங்குவதன் மூலம், இந்நாட்டில் தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான இன்னோர் தூணாக ஜனநாயக மக்கள் முன்னணியைப் பலப்படுத்த வேண்டும் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினராகிய நாம் தங்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்மக்கள் ஒன்றுபட்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்து ஓர் வரலாறு காணாத வெற்றியை கொடுத்ததன் மூலம் தமிழ் மக்களின் உரிமைக்குரலை உலகறியச்செய்தார்கள்.
வடக்கில் மட்டுமன்றி மேல்மாகாணத்திலும் தமிழ்பேசும் மக்கள் வரலாறு படைப்பதற்கான காலம் கனிந்திருக்கிறது.
எனவே ஏணிச்சின்னத்துக்கே தங்கள் வாக்குகளை அளித்து ஜனநாயக மக்கள் முண்ணணியை பலப்படுத்துவதன் மூலம் தமிழ்பேசும் மக்களாகிய எங்கள் அனைவரது உயர்ச்சிக்கும் வழிகோலுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
















