மாயமான மலேசிய விமானம் MH370 குறித்து சர்ச்சைகள் நிறைந்துள்ள நிலையில், தற்போது பிரான்ஸ் வெளியிட்டுள்ள செயற்கைகோள் படங்களில் 122 சிதைந்த பொருட்கள் மிதப்பது தெரியவந்துள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 7ஆம் திகதி நள்ளிரவு மாயமானது.
இதுவரையிலும் அதில் பயணித்தவர்களின் நிலை என்ன என்பது குறித்து உறுதியான தகவல் ஏதுவுமில்லை.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்திருந்தார்.
மேலும் விமானத்தில் பயணம் செய்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் செயற்கைக்கோள் புகைப்படத்தில் 122 சிதைந்த பொருட்கள் மிதப்பதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த பொருட்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் பேர்த் நகருக்கு 2557 கிலோ மீற்றர் தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 23ஆம் திகதி செயற்கைக்கோளினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களில் 23 மீற்றர் நீளம் வரையான பாகங்கள் காணப்படுவதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

















