அரசாங்கத்துடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இவ்வாறு அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
குறிப்பாக அமெரிக்கா ஆதரவு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவுடன் சந்திப்பு நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஆதரவு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தாம் ரவிநாத் ஆரசியசிங்கவிடம் கோரியதாக குறிப்பிட்டுள்ளார்.இந்த சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனும் தம்முடன் இணைந்துகொண்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறான ஓர் சந்திப்பு நடைபெற்றதாக ரவிநாத் ஆரியசிங்க ஒப்புக்கொண்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தம்மை சந்தித்தாகவும், சாதாரண பொது விடயங்கள் பற்றி பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

















