ஜெனிவாவை காட்டி தேர்தலில் வெற்றி பெற முயற்சித்த அரசாங்கத்திற்கு பொதுமக்கள் பாரிய பின்னடைவை பெற்றுக்கொடுத்து தகுந்த பாடத்தை கற்பித்துள்ளனர். எனவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் முயற்சிகளை அரசாங்கம் இப்போதைக்கு முன்னெடுக்கப் போவதில்லையெனத் தெரிவித்த ஜே.வி.பி தலைவர் அநுர திஸாநாயக்க இனி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய காலம்
வந்துவிட்டதாகவும் எனவே பிரிந்தவர்கள் அனைவரும் மீண்டும் இணைய வேண்டுமென்றும் பகிரங்க அழைப்பையும் அவர் விடுத்தார்.
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. யின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மேல் மாகாண மற்றும் தென் மாகாண சபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் தலைவரும்இ எம்.பி. யுமான அநுர திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த காலத் தேர்தல்களில் எமது கட்சி சிறிது பின்னடைவைக் கண்ட போதும் தற்போது நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் மக்கள் எமக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இது மக்கள் மத்தியில் நாம் கொண்டு சென்ற கொள்கைக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல அரசாங்கத்தின் மக்கள் எதிரான நடவடிக்கைகளுக்கு கிடைத்த பதிலடியாகும்.
இம் மாகாண சபைகளின் ஆட்சியதிகார காலம் இருக்கையில் பலாத்காரமாக கலைத்து தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காகவே அரசாங்கம் தேர்தலை நடத்தியது.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டு வரும் நாளை இலக்காக வைத்தே தேர்தல் நடத்தப்பட்டது.
இப் பிரேரணை மூலம் நாட்டுக்கு ஏற்படும் அகெளரவம், அபகீர்த்தி மற்றும் ஏற்படும் நெருக்கடிகளை அரசாங்கம் சிந்திக்கவில்லை.
அதற்கு முகம் கொடுத்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்காது அரசியல் இருப்புக்காக தேர்தலை நடத்தியது.
ஜெனீவாவில் தோற்றாலும் எனக்கு பிரச்சினையில்லை ஆனால் மாகாண சபைத் தேர்தல்களில் எனக்கு வெற்றி கிடைக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் ஜனாதிபதியின் சுயரூபம் வெளிப்படுகிறது. அத்தோடு ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் மக்கள் இத் தேர்தலில் அரசாங்கத்திற்கு அமோக வாக்குகளை பெற்றுக் கொடுத்து வெற்றி பெறச்செய்ய வேண்டுமென்றும் ஜனாதிபதி மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால் இத்தேர்தலில் மக்கள் அவ் வேண்டுகோளை நிராகரித்து கடந்த கால தேர்தல்களை விட 2,65,000 வாக்குகளை குறைத்துள்ளனர்.
விசேடமாக ஜனாதிபதியின் கோட்டையாகக் கருதப்படும் அம்பாந்தோட்டையில் இம் முறை அரசாங்கத்திற்கான வாக்குகள் நூற்றுக்கு 13சதவிகிதம் குறைந்துள்ளது.
அரசின் வேண்டுகோளுக்கமைய மக்கள் ஜெனீவா பிரேரணையை எதிர்த்து வாக்களித்ததாக தெரியவில்லை. மாறாக அதனை ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது.
மேல் மாகாணம்
நாட்டின் ஆட்சியதிகாரத்தை மேல் மாகாண சபை தேர்தல் பெறுபேறுகளே தீர்மானிக்கும்.
இம் முறை அரசாங்கமும் இம் மாகாணத்தில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ளது.
கடந்த மேல்மாகாண சபையில் அரச தரப்பில் 68 உறுப்பினர்கள் இருந்தனர். இன்று அது 56ஆகக் குறைந்துள்ளது. 12 உறுப்பினர்கள் குறைந்துள்ளனர்.
எங்களுக்கு கடந்த மாகாண சபையில் 3 உறுப்பினர்கள் இருந்தனர். இம் முறை அது 6ஆக அதிகரித்துள்ளது.
இது எமக்கும் எமது கொள்கைக்கும் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தை ஆரம்பிப்பதற்கான மக்கள் வழங்கிய வெற்றியாகும்.இதற்காக மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கையின் தேர்தல்கள் வரலாற்றில் அதிகளவில் அரச வளங்களும், அரச அதிகாரிகளும் பயன்படுத்தப்பட்ட தேர்தல் இதுவாகும்.
இதற்கு முன்னுதாரணமாக ஜனாதிபதியே இருந்தார். அனைத்து தேர்தல்கள் சட்டத்தையும் மீறி அமைச்சர்களுக்கும் வழி காட்டினார்.
எமக்கு கிடைத்த இந்த வெற்றியானது நாட்டின் அரசியல் திசை மாறுவதற்கான ஆணையாகும்.
இனி ஜனநாயக விரோதமான இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தினை ஆரம்பிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. எனவே எம்மை விட்டு பிரிந்தவர்கள் உட்பட அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் எம்மோடு இணையுமாறு இத் தருணத்தில் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இந்த மக்கள் அரசாங்கத்திற்கு புகட்டிய பாடம் அதன் தேர்தல் நடத்தும் வரைபடத்தையே மாற்றும் நிலைக்கு தள்ளியுள்ளது.
இப்போதைக்கு அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடத்தாது என்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

















