இலங்கை அரசியல்வாதிகளுக்கு பயணத் தடையை விதிக்க புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சித்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள் வெளிநாட்டுப் பயணங்களை தடை செய்யும் வகையிலான உத்தரவுகளை பெற்றுக்கொள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் முயற்சித்து வருவதகாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளுக்கு எதிராக பயணத்தடை, சொத்து முடக்கம் போன்றவற்றை விதிப்பதே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் இலக்காக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய வாழ் புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கை அரசியல்வாதிகளுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிப்பதில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தீவிர முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தை இலக்கு வைத்து புலி ஆதரவு அமைப்புக்கள் போராட்டங்களை நடாத்த உள்ளதாக, பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பீ.எம். ஹம்சா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















