அரசாங்கம் வெளியிட்டுள்ள தடைப் பட்டியலில் பல தவறுகளும் பிழைகளும் இருப்பதாக குற்றச்சாட்டுகள்

question-markஇலங்கை அரசாங்கம் சில அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது தடை விதித்து வெளியிட்டுள்ள பட்டியலில் பல தவறுகளும் பிழைகளும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

விடுதலைப் புலிகள் உட்பட 16 அமைப்புகள் மற்றும் 425 தனி நபர்களுக்கு தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களும் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டை ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு அமைப்பாளர் என்று கூறப்படுபவரின் பெயரும் அதில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர்களின் பெயர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையின் நிர்வாகப் பொறுப்பிலுள்ளவர்களின் பெயர்களும் அதில் உள்ளன எனக் கூறும் அரியநேத்திரன், அதன் காரணமாக உள்ளூர் மக்கள் பெரும் கவலையும் கலக்கமும் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அரசின் பட்டியல் வெளியானதை அடுத்து தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு மீண்டும் எற்பட்டுள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

உள்ளூர் மக்களின் பெயர்களும் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இருப்பது தொடர்பில் பலர் தொடர்ச்சியாகத் தன்னிடம் வந்து முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் இதன் காரணமாக சமூகப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவை மட்டுமல்லாமல் கனடாவிலிருந்து இயங்குவதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ள சில அமைப்புகள் தற்போது இயங்கவில்லை என்றும் அவை இயங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ள விலாசங்கள் தவறானவை என்று ஊடகச் செய்திகள் வந்துள்ளன என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply