ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்;ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை விசேட நிபுணர் குழு ஒன்றை நியமித்து விசாரணை நடாத்த உள்ளார். மூவர் அடங்கிய இந்த விசாரணைக் குழுவினர் எதிர்வரும் மே மாதத்தில் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர்,
இந்த சர்வதேச விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாட்டுக்கு வெளியே நடத்தப்பட உள்ள சர்வதேச விசாரணைகளுக்கு சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச விசாரணைகளில் பங்கேற்று சாட்சியமளிப்பதானது அரசியல் சாசனத்திற்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச விசாரணைகளின் மூலம் நாட்டின் இறைமை பாதிக்கப்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க முடியாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் சாசனத்தைப் பேணிப் பாதுகாப்பதாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை உள்ளிட்ட 60 பேர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசேட நிபுணர் குழுவின் விசாரணைகளில் சாட்சியமளிக்க உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று நேற்றைய தினம் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















