கறுப்பு, வெள்ளை இனத்தவர்களிடையேயான பிரச்சினையை தீர்க்க முடியாது இன்று வரை புரையோடிப்போயுள்ள நிலையில், தென்னாபிரிக்காவால் எப்படி எமது பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியும் என கேள்வியெழுப்பும் ஜே.வி.பி. தமிழ் மக்களின் நெருக்கடிகளைப் பயன்படுத்தி அரசாங்கத் தரப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்:-
இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினையென்பது உள்நாட்டுப் பிரச்சினையாகும். இதனை நாமே தீர்க்க வேண்டும். கடந்த கால ஆட்சியாளர்களும் இப்பிரச்சினையை சர்வதேசமயமாக்கி நோர்வே, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் எமது பிரச்சினையில் தலையிடும் நிலைமையை உருவாக்கின.
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கமும் இப்பிரச்சினையை சர்வதேசமயமாக்கிவிட்டது.
யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கழிந்துவிட்டது. ஆனால், இன்றுவரை வடமாகாண மக்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படவில்லை.
அம்மக்களுக்கு சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் வழங்கப்படவில்லை. எனவேதான் சர்வதேச நாடுகள் தலையிடுகின்றன. அதற்கான கதவுகளை அரசாங்கமே திறந்து விட்டுள்ளது.

















