சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறும்!- பொதுபல சேனா – மன்னாரில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு

Pothupalasena

சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறும் என்பதில் சந்தேகம் இ;ல்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிறிய குடும்பம் பொன்னானது என்ற கொள்கை காரணமாக பல சிங்களப் பெண்கள் குடும்பக்கட்டுபாடு செய்து கொண்டனர்.

முஸ்லிம்க்ள பல்வேறு வழிகளின் சிங்களப் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்கின்றனர். இதன் காரணமாக எதிர்காலத்தில் சிங்களப்பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனமாக மாற்றமடையும்.

கொழும்பு, கண்டி, மாத்தளை போன்ற நகரங்களின் முக்கிய வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களாக முஸ்லிம்கள் திகழ்கின்றனர்.

அதுமட்டுமன்றி சிங்கள மக்களின் கிராமங்களையும் முஸ்லிம் மக்கள் கைப்பற்றி வருகின்றனர். முட்டாள் சிங்கள மக்கள் தங்களது வீடுகளை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பொதுபல சேனா எதிர்ப்பு

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை பொதுபல சேனா அமைப்பு எதிர்ப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வடமேற்கு மாவட்டமான மன்னாரில் போர் காலத்தில் இடம்பெயர்ந்து வடமேல் மாகாணத்தில் வாழ்ந்துவந்த சுமார் 250 குடும்பங்களின் மீள்குடியேற்றத்தை பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா அரச அதிகாரிகளின் துணையுடன் தடுக்கிறது என்று உள்ளூர் முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

நூறாண்டு காலமாக தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்தப் பகுதியிலிருந்து போர் காலத்தில் தாங்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது என்றும், அங்கு வாழ்ந்ததற்கான அனைத்துச் சான்றுகளும் தம்மிடம் உள்ளன என்றும் மறிச்சுக்கட்டி மரைக்காயர் தீவு பள்ளிவாசலின் மௌலவி மஹ்மூத் தவ்ஃபீக் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அப்பகுதியில் 300 ஏக்கருக்கும் அதிகமான தமது நிலங்களை இலங்கை படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் எனக் கூறும் அவர், வில்பத்து சரணாலயத்துக்கு அருகிலுள்ள தமது பூர்வீக இடத்தில் மீள்குடியேற முயற்சித்தபோதே, செவ்வாய்கிழமை பொதுபல சேனா அமைப்பினர் வந்து அதற்கு தடை ஏற்படுத்தினர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்புகளுக்கு ஆதரவாக அரச அதிகாரிகளும் செயல்படுவதாகவும் மௌலவி மஹ்மூத் தவ்ஃபீக் கூறுகிறார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பொதுபல சேனா அமைப்பினரின் கருத்துக்களை பெற பிபிசி முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை.

இதனிடையே இந்த விஷயத்தில் தலையிட்டு மறிச்சுக்கட்டிப் பகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உதவ வேண்டும் என இலங்கையின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Tags: , , ,

Leave a Reply