சூரியனை பூமி சுற்றிவருகிறது,பூமியை சந்திரன் சுற்றிவருகிறது.
இந்நிகழ்வின் போது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வருகிற போது பூமியின் நிழலால் சந்திரன் மறைந்து பிறகு தெரிவதே சந்திர கிரகணம் எனப்படுகிறது.
தெற்கு மற்றும் வட அமெரிக்காவில் நேற்று காணப்பட்ட இவ்வகையிலான அரிய சந்திர கிரகணத்தை லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
வழக்கமாக, பால் பந்து போன்று தோன்றும் சந்திரன், இந்த கிரகணத்தின் போது, பூமியின் நிழல் தன் மீது விழுந்த வேளையில் மெல்ல, மெல்ல நிறம் மாறி, ரத்தத்தின் செந்நிறமாக காட்சியளித்ததால் இந்த கிரகணத்தின் போது சந்திரன் ‘ரத்த நிலா’வாக தெரிந்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி, திங்கட்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை ஒவ்வொரு இடத்தின் நேர வேறுபாட்டுக்கேற்ப அமெரிக்க மக்கள் இந்த ரத்த நிலாவினை கண்டு ரசித்தனர்.
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள பிரிஃபித் விண்வெளி கோளரங்கத்தின் அருகே உள்ளே புல்வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் தொலைநோக்கியின் மூலம் இந்த அபூர்வக் காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.
















