இரவுவேளை வீட்டினுள் அத்துமீறி புகுந்து பெண்களை அச்சுறுத்திய கடற்படைச் சிப்பாய்: அம்பாறையில் மக்கள் போராட்டம்!

protest5கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் பிரதேசத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் வீடொன்றினுள் கடற்படைச் சிப்பாய் ஒருவர் அத்துமீறி நுழைந்து பெண்களை அச்சுறுத்த முற்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடற்படைச் சிப்பாயை பொதுமக்கள் பிடித்து அருகி்ல் இருந்த கடற்படை முகாமில் ஒப்படைத்த போது அங்கிருந்த சிப்பாய்களால் அந்த கடற்படைச் சிப்பாய் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் ஒன்றுகூடி கடற்படை முகாம் அதிகாரிகளுக்கெதிராக கோஷமிட்டனர்.

பெண்களை அச்சுறுத்திய குறித்த கடற்கடைச் சிப்பாயை உடனடியாகப் பொலிஸார் கைது செய்ய வேண்டும் எனவும், அந்தக் கடற்படை முகாமையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

வீதியில் ரயர்களைப் போட்டு எரித்து பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அன்ஸில் பொதுமக்களின் கோரிக்கைகளை பொலிஸாருக்கும், கடற்படையினருக்கும் தெளிவுபடுத்தினார்.

குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட கடற்படைச் சிப்பாயை பொலிஸார் கைது செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டோரைக் கைது செய்வோம் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags: , ,

Leave a Reply