மாகாண சபையின் அதிகாரங்களை திரும்பப் பெறமுடியாது!

மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை மத்திய அரசாங்கம் திரும்பப் பெறமுடியாதவாறு புதிய அரசியல் யாப்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று மாலை பருத்தித்துறை நகரில் நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வில், உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

“மாகாணசபைக்கு கொடுக்கப்படுகின்ற அதிகாரங்கள் மீளப்பெற முடியாதவாறு இருக்க வேண்டும். கொடுக்கப்படும் அதிகாரங்கள் குறித்து மத்திய அரசில் சட்டம் இயற்ற முடியாதவாறு அமைய வேண்டும். இவ்விடயங்கள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அதனால்தான் நாங்கள் இதனை சமஷ்டிக்குரிய குணாம்சம் என்று கூறுகின்றோம். ஆகவே அரசியல் அமைப்பு மீறப்படுகின்றபோது அதனைத் தடுக்கவேண்டிய தேவை ஏனைய சமூகத்தைவிட எமது சமூகத்தில் அதிகமாக இருக்கின்றது.

இங்கு ஜனநாயகம் மீறப்படுகின்றபோது அதிகளவில் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள்தான். ஆனால் ஒட்டுமொத்தமாக நாட்டிலே ஜனநாயகம் மீறப்படுகின்றபோது எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியது அவரது கடமையாகும்” என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!