அமலா பாலுக்கு உற்சாகம் தரும் வகையில் பல்வேறு சூழ்நிலைகள் அமைந்துக் கொண்டு இருந்தாலும் சமீபத்தில் ஊடகங்களில் பரவி வரும் சர்ச்சை ஒன்று அவரை சங்கடப்படுத்தி வருகிறதாம்.
படப்பிடிப்பு தளத்துக்கு குறிப்பிட்ட கால நேரத்தில் வரக்கூடிய, தொழில் பக்தி உள்ள நடிகை என பெயர் எடுத்தவராம் அமலா பால்.(அப்படியா?) அவர் மீது ஒரு தெலுங்குப் பட நிறுவனம் ஒன்று, அவர் தன்னுடைய திருமணத்தை பற்றி முன்னரே கூறவில்லை என்றும் அதனால் அவர் படத்தில் இருந்து நீக்கப்படுகிறார் என்றும் குற்றம் சாட்டி உள்ளது.
மென்மையான, அதிர்ந்து பேச தெரியாத நடிகை என பெயர் எடுத்த(?) அமலாவை இந்த குற்றச்சாட்டு அதிர வைத்து உள்ளதாம்.
எனவே மனம் நொந்துபோய் தன்னுடைய விளக்கத்தை ஊடகங்களுக்கு அனுப்பி இருக்கிறார்….
ப்ரீயா இருந்தா படிச்சுப் பார்த்துட்டு உச் கொட்டுங்க…
“இந்த நிறுவனம் என்னை முதலில் தொடர்பு கொண்டபோது மார்ச் முதல் மே மாதம் வரை உள்ள கால கட்டத்தில் 45 நாட்கள் ஒதுக்க வேண்டும் என்று கூற, நானும் அதற்க்கு உட்பட்டு அதற்கு அத்தாட்சியாக ஒரு பத்திரத்திலும் நாங்கள் பரஸ்பரம் கை எழுத்திட்டுக் கொண்டோம்.
படப்பிடிப்புக்கான நாட்கள் நெருங்கி வரும் சூழ்நிலையில் அவர்களை தொடர்பு கொள்ள பல்வேறு முறைகளில் முயற்சி செய்தேன். தொடர்பில் வந்தாலும் திருப்திகரமான பதில் வரவில்லை.
திரை உலகில் இது சகஜம் என்று நானும் என்னுடைய மற்ற பட வேலைகளின் இடையே இவர்களுக்கும் தேதி கொடுக்க அணுகியபோதும் இப்போது, அப்போது என்று திடமில்லாத பதிலே வந்தது.
வெளி நாட்டில் படப்பிடிப்பு என்றால் என்னுடைய பாஸ்போர்ட் உட்பட என்னுடைய ஸ்டாஃப் பாஸ்போர்ட் வரை விசாவுக்காக சமர்பிக்க வேண்டும். ஆனால் இதுவரை வெளி நாட்டில் படமாக்கப் போகிறோம் என்று கூறிக் கொள்ளும் அந்த பட நிறுவனத்தினர் அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் நான், என்னுடைய திருமணத்தை பற்றி முன்னரே அவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு என்னை காயப்படுத்துகிறது.
நான் அவர்களுக்குக் கொடுத்தது மார்ச் முதல் மே வரை குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் 45 நாட்கள் மட்டுமே.
இதில் ஜூன் மாதம் நடைபெற வேண்டிய திருமணத்தை பற்றி அவர்களுக்கு கூற வேண்டிய அவசியம் என்ன?
கூறப்பட்ட காலத்துக்குள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் இருப்பதற்கு பலவேறு உண்மையான காரணங்கள் இருக்க, என் திருமணத்தை சுட்டிக்காட்டி அவர்கள் புழுதி வாரி இறைப்பது அநாகரீகமானது.
திருமண பந்தம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்க வேண்டிய ஒரு அரிய நிகழ்ச்சி.
எனக்கும் அப்படித்தான்.
தங்களது தவறுகளை மறைக்க என் மீதும், என் திருமண சடங்கின் மீதும் குற்றஞ்சாட்டுவது மிகவும் வருத்தத்துக்குரியது.
நான் இதுவரை எந்த தயாரிப்பாளருக்கோ, இயக்குநருக்கோ இடையூறாக இருந்ததே இல்லை. இருக்கவும் மாட்டேன்.
இந்த விளக்க உரை கூட யாரையும் குற்றம்சாட்டவோ, குறை கூறவோ இல்லை.
என்னை அறிந்தவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் உண்மை நிலை கூறுவதுதான் ’’ என்கிறார் அமலாபால்.
















