இலங்கை தொடர்பான விசாரணைக் குழுவை ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம் இந்த மாத இறுதியில் அறிவிக்கும் என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் ஐ.நா விசாரணைக் குழு குறித்து கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார். “விசாரணைக் குழுவை உருவாக்குவது தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய விசாரணைகளை மேற்கொள்ளும் போதும் எப்போதுமே, விசாரணைக் குழுவை உருவாக்குவது மற்றும் அதன் வரவுசெலவுத் திட்டம் என்பனவற்றுக்கு நியுயொரக்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தின் அனுமதியை பெறவேண்டும்.
இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், நாம் பெரும்பாலும் இந்த மாத இறுதியில் விசாரணைக் குழுவை அறிவிப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைய உருவாக்கப்படவுள்ள இந்த விசாரணைக் குழுவின் பணிகளுக்கு ஒரு இலட்சத்து 46 ஆயிரம் டொலர் நிதி தேவைப்படும் என்று. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















