இந்திய அமெரிக்க, இஸ்ரேலிய துணைத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த பாக். உளவு அமைப்பு திட்டம் தீட்டியிருந்தமை அம்பலம்

israeli-embassy-Indiaஇந்தியாவில் உள்ள இரண்டு வெளிநாட்டுத் துணைத் தூதரகங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துதற்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு திட்டம் வகுத்திருந்தமை அண்மையில் சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக மத்திய பாதுகாப்பு முகவரமைப்புகள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரான சாகிர் ஹூசேனிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம் மற்றும் பெங்களூரில் அமைந்துள்ள இஸ்ரேலிய துணைத்தூதரகம் ஆகியவற்றின் மீதான உளவு ஆராய்ச்சி நடவடிக்கையை மேற்கொள்வதற்கான பாகிஸ்தான் உளவு அமைப்பின் (ஐ.எஸ்.ஐ.) திட்டத்தின் பிரகாரம் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அதிகாரி ஒருவரால் தான் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்ததாக விசாரணையாளர்களிடம் தெரியவித்துள்ளதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

தென்கிழக்காசிய நாடொன்று உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையொன்றின்போது ஹூசைன் கடந்த மாதம் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் உளவு அமைப்பு மாலைதீவைச் சேர்ந்த இரண்டு நபர்களை சென்னைக்கு அனுப்பிவைக்க திட்டம் வகுத்து வந்ததாகவும் அவர்களின் பயண ஆவணங்கள் மற்றும் மறைவிடங்களை ஒழுங்கு செய்யும் பொறுப்பு தன்னிடமே ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் விசாரணையாளர்களிடம் கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘விசா’ வழங்கல் ஆலோசகரான அமீர் சுபைர் சித்தீக் என்பவரே மேற்குறித்த பொறுப்புக்களை தன்னிடம் ஒப்படைத்திருந்ததாக ஹூசேன் தெரிவித்துள்ளார். மேலும் மேற்குறித்த இரண்டு துணைத் தூதரக கட்டிடங்களுக்கான நுழைவாயில்கள் மற்றும் வீதிகளைக் காண்பிக்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய துணைத்தூதரகங்களினதும் படங்களையும் துப்பறியும் நிபுணர்களால் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அலுவலகத்திற்குள் உள்ள கணினி ஒன்றில் குறித்த படங்கள் தரவிறக்கம் செய்யப்பட்டிருந்ததையும் இலங்கை அதிகாரிகளுடன் இது பகிர்ந்துகொள்ளப்பட்டிருந்ததையும் கணினிசார் கையொப்பங்கள் காண்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply