“மோடியை அரசியல் களத்தில் முழுமூச்சாக சந்திக்க தயார்” – ராகுல் சூளுரை!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் களத்தில் முழுமூச்சாக களமிறங்கவுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புபனேஷ்வரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “என் கொள்கைகள், கோட்பாடுகளில் மோடிக்கு உடன்பாடு இருக்காது. அதைப்போலவே அவருடைய கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, நான் முழு மூச்சுடன் அவரை எதிர்ப்பேன். அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

ஆனால், எக்காரணம் கொண்டும் அவரை நான் வெறுத்துவிட மாட்டேன். தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு மோடிக்கு முழு உரிமை இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. விடமிருந்து வந்த தூற்றுதல்கள்தான் என்னை ஒரு நல்ல அரசியல்வாதியாகவும், மனிதனாகவும் மாற்றியது.

இந்த காரணத்தினால் தான், பிரதமர் மோடி என்னைத் தூற்றினால் அவரை கட்டிப்பிடிக்க வேண்டும் என்பது போல இருக்கிறது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அனைத்து மட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். கொள்கையின் ஊடுருவல் உள்ளது. நாட்டில் இருக்கும் அனைத்து அரசு அமைப்புகளிலும் இந்தக் கொள்கை உள்ளே நுழையப்பார்க்கிறது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!