அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்து நிறுத்தும் முகமாக சுங்க மற்றும் குடிவரவு திணைக்களங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து செயற்றிறன் மிக்க புதிய முன்னரங்கு எல்லைப் பாதுகாப்பு முகவர் நிலையமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா வெள்ளிக்கிழமை
அறிவித்துள்ளது.
இந்த புதிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிலையம் உயர் அதிகாரத்துவம் பொருந்திய சிவிலிய ஆணையாளர் தலைமையில் செயற்படும் எனத் தெரிவித்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன், அந்த ஆணையாளர் பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் கையாளப்படும் மாதிரிகளின் அடிப்படையில் அந்த ஆணையாளர் படகுகளில் வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் குறித்து தனக்கு நேரடியாக அறிக்கையிடவுள்ளதாக தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவானது அங்கீகரிக்கப்படாத படகுகளில் வரும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிரான தனது கடும் போக்கு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த புதிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிலையத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
எதிர்வரும் வாரம் தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை பழைமைவாத அரசாங்கம் முன்வைக்கவுள்ளதையொட்டி ஸ்கொட் மொரிஸன் தொடர்ந்து உரையாற்றுகையில், படகுகளில் வருபவர்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் 2.5 பில்லியன் அவுஸ்திரேலிய டொலரை சேமிக்கக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
அத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4 புகலிடக்கோரிக்கையாளர்களளுக்கான தடுப்பு நிலையங்களுடன் மேலும் 6 தடுப்பு நிலையங்களை மூடக்கூடியதாக இருக்கும் என அவர் கூறினார்.
அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு கொள்கையின் கீழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்நாட்டிலிருந்தே பெருமளவான புகலிடக்கோரிக்கையாளர்கள் படகுகளில் அவுஸ்திரேலியாவை வந்தடைவது வழமையாகவுள்ளது.
“புதிய எல்லை முகவர்நிலையத்தை ஸ்தாபிக்கின்றமை எமது எல்லைகளின் பழகாப்பை பலப்படுத்துவதாக அமையும்” என மொரிஸன் மேலும் தெரிவித்தார்.
















